Skip to main content

150 ஏக்கரில் திரைப்பட நகர்; அமைச்சர் சாமிநாதன் புதிய தகவல்

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
minister saminathan about film city

சென்னை தரமணி, அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமையவுள்ள இடங்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் நடிகர் ராஜேஷ் உள்ளிட்ட செய்தித் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். 

அதன் பின் அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “எம்ஜிஆர் திரைப்பட நகரத்தில் உள்ள படப்பிடிப்பு தளம் பழுதடைந்திருந்த நிலையில், கடந்தாண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு ரூ.5 கோடியில் குளிர்சாதன வசதியுடன் படப்பிடிப்பு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையிலேயே படம் எடுக்கக் கூடிய வகையில் படப்பிடிப்பு தளத்தைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மூன்று தளங்களை கொண்ட அரங்குகள் படப்பிடிப்பு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அரங்குகள் ரூ.39.33 கோடியில் கட்டப்பட இருக்கிறது. அந்த வகையில் படங்கள் தயாரிப்பவர்களுக்கும், திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கும், சின்னத் திரையை சார்ந்தவர்களுக்கும் சரியான வாய்ப்பாக அமையும். சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்துவதால் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது, செலவுகள் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் திரைப்படத் துறையை சார்ந்தவர்கள் விரும்பக்கூடிய திட்டமாக நிச்சயமாக இது அமையும். 

முதல்வர் அனுமதியுடன் இன்று திட்டத்தின் பணிகள் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் முதல்வரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. அமைச்சர் உதயநிதியும் அதற்கான இடத்தை பார்வையிட்டுள்ளார். திரைப்பட நகர் அமைப்பதற்கு உகந்த இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது” என்றார்.  

சார்ந்த செய்திகள்