Skip to main content

கட்டுப்பாடுகளை விதித்த ஸ்டெப் ஃபாதர்; படிக்க முடியாமல் தவித்த சிறுமி - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :31

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
Parenting counselor asha bhagyaraj advice 31

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஸ்டெப் ஃபாதரால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யரஜ் நம்மிடம் விவரிக்கிறார். 

தன்னுடைய குழந்தைக்கு படிப்பில் கவனம் இல்லை என்று கவுன்சிலிங்கிற்கு பேரண்ட்ஸ் தான் கூட்டி வந்திருந்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண், டான்சர் என்ற கனவை மனதில் வளர்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், ஸ்டெப் ஃபாதரின் கடுமையான கட்டுப்பாடுகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்திருக்கிறாள். தனது விருப்பம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் இல்லாதது அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அந்தப் பெண் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பது உண்மைதான். படிக்க தோன்றவில்லை, பிடிக்கவில்லை என்று அவளே ஒப்புக்கொண்டாள்.  உன்னுடைய கனவு என்ன என்று கேட்டபோது, டான்சர் ஆக வேண்டும் என்றாள். உன் கனவு என்ன வேணாலும் இருக்கட்டும். ஆனால், அடிப்படை படிப்பு வேண்டுமே என்று சொன்னதற்கு, தன்னால் படிப்பில் கவனம் கொள்ளாததற்கு காரணத்தையும் உடனே சொல்லிவிட்டாள்.

தான் மூன்றாவது படிக்கும்போது, தனது அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த ஸ்டெப் ஃபாதர் தன்னை மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக சொன்னாள். அவர் எல்லாமே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். எவ்வளவு சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று அவர்தான் சொல்வார். ஷாப்பிங் போனால் என்ன வாங்கியிருக்கிறோம் என்று பேக்கை வாங்கி பார்ப்பார். அவருக்கு பிடிக்காததை வாங்கியிருந்தால் உடனே அதற்கு கடுமையாக திட்டுவார். இல்லையென்றால், அந்த பொருளை மீண்டும் அந்த கடையில் ஒப்படைக்க சொல்வார். தன் அம்மாவையும் வெளியே பிடித்த இடத்துக்கு  அனுமதிப்பதில்லை என்று கூறினாள். ஸ்டெப் ஃபாதரின் கடுமையான நடத்தையால் அவள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அந்தப் பிள்ளைக்கு மன ஆறுதல் அளிக்கவும் கனவுகளை அடைய ஊக்கப்படுத்த வேண்டியிருந்தது.

நான் நன்றாக டான்ஸ் ஆடுவேன். நாம் சமூகத்திற்கு இதெல்லாம் சரியா வராது என்று கட்டாயபடுத்தி படிக்க வைக்கிறார். அம்மாவிடம் இதைப் பற்றி சொன்னாலும், இது எனக்கு இரண்டாவது திருமணம். இப்போது வெளியேறினால் நமக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. புது வாழ்க்கையைத் தொடங்க எனக்கு தைரியம் இல்லை என்று பொறுத்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு பணமோ, பணக்கார இடமோ தேவையில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எங்களால் அவர் இல்லாமல் வாழ முடியும் என்றாள். அம்மாவிடம் பேசும்போது, தான் அவரைப் பிடித்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் அவர் அப்படி இருப்பார் என்று கல்யாணம் முன்பு கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். அந்தக் கணவரிடம் பேசும்போது அவர் மிகவும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் என்று புரிந்தது. தான் அந்தக் காலத்திலேயே இன்ஜினியர் படித்து செட்டில் ஆனதாகவும், டான்ஸ் எல்லாம் ஃப்யூச்சரே கிடையாது என்ற பாணியிலும் தான் அவர் பேசினார். அவர் நான்  பேசுவதை கேட்கவே தயாராக இல்லை. 

எனவே இப்பொழுது முதல் அடுத்தகட்ட கவனமாக அந்த குழந்தை எக்ஸாமுக்கு தயாராக வேண்டும். அதனால் அம்மாவிடம், அவரை எதிர்க்காமல் மகளுடைய எமோஷன்ஸ் கவனம் கொடுங்கள் என்று எடுத்து சொன்னேன். அந்த பிள்ளையிடமும் இந்த வாழ்க்கை உனக்கு பிடிக்கவில்லை என்றால் இதிலிருந்து நீ சீக்கிரமாக வெளியேற இந்த எக்ஸாமில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முடியும். ஒரு வேளை நீ ஏதாவது ஒரு தேர்வில் பெயிலானால் கூட மறுபடியும் ஒரு வருடம் இருந்து மீண்டும் எழுத வேண்டி வரும். அதனால் முதலில் இந்த வாழ்க்கையிலிருந்து வர தேர்ச்சி பெற வேண்டும் என்றேன். அந்த குழந்தை ஒத்து கொண்டு இந்த வாழ்க்கையை விட்டு அம்மா வந்து விட வேண்டும் என்று கண்டிஷன் போட, நன்றாக படித்து எக்ஸாமில் தேர்ச்சி பெறு, அதன் பிறகு நம் வேலை கிடைத்து போகலாம் என்று அவள் அம்மாவும் ஆதரவு கொடுத்தார். ஆனாலும், பல நாள் பாதிப்பு என்பதால் அவளால் படிப்பில் கவனம் செலுத்த வரவில்லை. இந்த பிள்ளைக்கு தினசரி கவுன்சிலிங் வேண்டியதாக இருந்தது. அந்த அப்பாவிடமும் அந்தப் பெண்ணுக்கு தினமும் பயிற்சிகள், மெடிட்டேஷன் டைம் என்று எல்லாம் கொடுத்திருப்பதால் கண்டிப்பாக படிப்பில் நல்ல மார்க் எடுப்பாள் அதனால் அந்த நேரம் மட்டும் அந்த குழந்தையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன். தினசரி கவுன்சிலிங் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.