Skip to main content

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை; பாசிடிவ்வான செயல்களால் தேறிய மனநிலை  - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 70

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
jay-zen-manangal-vs-manithargal- 70

ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு பாலியில் துன்புறுத்தல் நடந்திருப்பதாக கூறி குழந்தை மிகவும் பயந்திருப்பதாக என்னிடம் அழைத்து வந்தனர். குழந்தை இரவு குப்புற படுத்து தூங்கும்போது அழுகிறது. குளிக்கும்போது அலறுகிறது. அமைதியாக இருக்கும் போது சில நேரங்களில் அம்மாவை அணைத்துக்கொண்டு அழுகிறது. இதுபோன்ற சின்ன சின்ன நடவடிக்கைகளை வைத்து பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கும் என்று நினைத்து, குழந்தையை அந்த மனநிலையிலிருந்து எப்படியாவது வெளியே கொண்டு வாருங்கள் என்று வேதனையுடன் கூறினர். 

நான் அந்த குழந்தைக்கு வீட்டிலிருந்தபடி கவுன்சில் கூறாமல் வெளியில் அழைத்து சென்று சாதாரண வாழ்க்கை வாழும் எளிய மக்களை சந்தித்து பேச சொல்லி அவர்கள் மூலம் என்ன கற்றுக்கொண்டது என்று கேட்பேன். இதே போல் ஒருமுறை துப்பறவு தொழில் செய்யும் ஒரு அம்மாவிடம் இந்த குழந்தையை அழைத்துச் சென்று பேசச் சொன்னேன். குழந்தை அந்த அம்மாவிடம் பேசும்போது, கஷ்டப்பட்டு உழைத்து வேலை செய்கிறீர்கள். வயதானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க அதற்கு அந்த அம்மா, என் பையன் பெரியவனாகி என்னை பார்த்துக்கொள்வான் என்று பதிலளித்தார். அதன் பிறகு அந்த குழந்தையை அழைத்து அந்த அம்மாவிடமிருந்து என்ன தெரிந்துகொண்டாய் என்று கேட்டால், நமக்கு முடியாதபோது இன்னொருவர் நம்மை பார்த்துக்கொள்ள வந்து விடுவார் என்று குழந்தை பதிலளித்து. 

அதேபோல் இன்னொரு நாள் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு இரத்த தான முகாம் நடந்தது. அதைப் பார்த்து அங்கு வேலை செய்யும் செவிலியர்களிடம் பேச வைத்தேன். இரத்த தானம் குறித்த நிறைய கேள்விகளை அந்த குழந்தை செவிலியரிடம் கேட்டது. அதில் யாரோ ஒரு முகம் தெரியாத நபர் இன்னொருவருக்கு இரத்த தானம் செய்து உதவலாம் என்ற பதில் அந்த குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் காரில் வந்து இறங்குபவர்களை பார்த்தால் சில நேரங்களில் அந்த குழந்தை பயந்தது. நான் அதைப் பற்றி பெரிதாக அந்த குழந்தையிடம் பேசாமல் தொடர்ந்து பாசிட்டிவ்வான விஷயங்களை அந்த குழந்தை கற்றுக்கொள்ள பழக்கினேன். ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு இருந்த அந்த பிரச்சனை தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் மாறி நல்ல நிலைக்கு தேறியது. இதை பார்த்த அந்த குழந்தையின் பெற்றோர் என்னிடம் வந்து, இருப்பதிலேயே மிகக்கொடுமையான விஷயம் பெண் குழந்தையை பெற்றுவிட்டு அந்த குழந்தைக்கு நடந்த பாலியல் சீண்டலுக்கு யார் காரணம்? என்று சந்தேகப்படுவதுதான். ஆனால் அதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்காமல் குழந்தையை சரி செய்ததற்கு நன்றி சார். நாங்களாக இருந்திருந்தால் அதுதொடர்பான பிரச்சனைகளுக்கு குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அந்த ஞாபகங்களை குழந்தைக்கு அதிகரித்திருப்போம். அதுபற்றிய ஞாபகங்கள் இல்லாமல் குழந்தை இப்போது நன்றாக இருக்கிறது என்றனர். 

பாலியல் தொடர்பான பிரச்சனைளை சரி செய்ய அண்ணன், தங்கை மற்றும் அக்கா, தம்பி உறவை வலுவாக்கினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் . எடுத்துக்காட்டாக சில இடங்களில் பெற்றோர்கள் தனது மூத்த மகளுக்கு உடல்நிலை சரி இல்லையென்றால் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அந்த பொறுப்பை தங்களது இளைய மகனிடம் முழுமையாக ஒப்படைத்து தனது அக்காவை அவன் பார்த்துக்கொள்வது. அக்காவுக்கு தேவையான மருத்துவ உதவி குறித்து டாக்டரிடம் கேட்க வைப்பது போன்ற செயல்கள் அவன் எண்ணங்களிலுள்ள பெண்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். ஒருவேளை தம்பி எதாவது தவறு செய்த பின்னர் பெற்றோர்கள் அவனை திட்டும்போது என் தம்பி சரியா வந்துவிடுவான் என்று சொல்லக்கூடிய அக்காவின் உறவை ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு அந்த அக்கா, தனது தம்பிக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்தசொல்லிவிட்டு திட்டுவோம். இப்படி செய்யாமல் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையான உறவை வலுபடுத்த வேண்டும். இந்த செயல்களால் மாற்றம் வருமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் எதிர்காலத்தில் பசங்ளை தவறு செய்யவிடாமல் செய்யும்.