Skip to main content

மகள் செய்த அந்த காரியம்; தூக்கமில்லாமல் தவிக்கும் கந்துவட்டி நபர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 43

Published on 12/08/2024 | Edited on 12/08/2024
jay zen manangal vs manithargal 43

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மகளுடைய இறப்புக்கு தானும் ஒரு காரணம் என வருந்திய அதிக சதவீத வட்டிக்கு விடும் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கவுன்சிலிங்கிற்காக வந்தார். அவருடைய மகள், வேறு ஒரு காரணத்திற்காக இறந்துள்ளார். தான் வட்டிக்கு பணம் கொடுப்பதால் தான் தன்னுடைய மகள் இறந்துவிட்டால் என்ற எண்ணம் அவருக்குள் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் குறைந்த சதவீதத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த இவருக்கு, சில பேர் சரியான முறையில் பணம் கொடுப்பதில்லை. குறைவான அளவு சதவீத வட்டி கொடுத்தால், ஏமாற்றிவிடுவார்கள் என்று மற்றவர்கள் அட்வைஸ் சொன்னதன் பேரில், அதிக அளவு சதவீத வட்டி கொடுக்கிறார். இப்படியே கொடுத்து கொடுத்து, சில வருடங்களிலேயே பெரிய அளவில் கோடிஸ்வரராகிறார். நாளடைவில் மனிதர்களை மறந்து வட்டியை மட்டும் நினைத்து, பணத்தை திருப்பி கொடுக்காதவர்களிடம் அடியாட்கள் மூலம் பணத்தையோ அல்லது பணத்திற்கு பதிலாக வேறு ஒரு பொருளை வாங்குகிறார். இது ஆரம்பத்தில் அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும், நாளடைவில் இப்படி வாங்கும் போது பணம் கொடுக்காதவர்களின் குடும்பத்தின் அழுகையைப் பார்த்து இவருக்கு மனசு வலிக்க ஆரம்பிக்கிறது. 

ஏதோ ஒரு தவறு செய்கிறோம் என்ற எண்ணம் இருந்தாலும், வட்டி விடும் தொழில் இப்படிதான் என அவருக்குள்ளே குழப்பிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் தான், வேறு ஒரு பிரச்சனை காரணமாக அவருடைய மகள் இறந்துவிடுகிறார். இந்த சம்பவம் அவரை நிறையவே பாதித்து, வட்டி தொழிலே செய்ய வேண்டாம் என்ற எண்ணம் வருகிறது. இந்த சமயத்தில் தான் என்னிடம் வந்து, இது தான் தன்னுடைய பிரச்சனை. ராத்திரியின் போது தூங்காமல் இறந்துவிடலாம் என்ற மனநிலை வருகிறது. அதனால், தான் உங்களிடம் வந்தேன் எனச் சொன்னார்.

வட்டி விடுவதை தொழிலாக வைத்துக்கொள்வோம். நியாயமானது என்றால் என்ன சொல்வீர்கள் என கேள்வி கேட்டு ஆரம்பித்தேன். அதற்கு அவர், 9 இருந்து 12 வரை சதவீத வட்டி விடுவது தான் நியாயமான வட்டி. இதற்கு மேல் விடுவது நியாயமில்லாதது தான் எனச் சொன்னார். நீங்கள் வட்டிக்கு விடும் பணத்தை 100ல் எத்தனை பேர் திரும்ப செலுத்துகிறார்கள் எனக் கேள்வி கேட்டதற்கு, 85 சதவீத பேர் திரும்பிக் கொடுத்துவிடுவார்கள், மீதமுள்ள 15 சதவீத பேரிடம் அதிக வட்டி விட்டு திரும்ப பெற்றுவிடுவேன் எனச் சொன்னார். அந்த 85 சதவீத பேரிடம் பெறும் பணம், எத்தனை மடங்கு வரும் எனக் கேட்டதற்கு ஒன்றரை மடங்கு வரும் எனச் சொன்னார். இது நியாயமானதா என்றதற்கு நியாயமில்லை என்றார். நியாயமாக திரும்பி கொடுத்தவர்களிடம் அசலை மட்டும் பெற்றுவிடும் கடைசி இரண்டு மாத வட்டியைக் கொடுக்க வேண்டாம் ஏன் சொல்ல மாட்டீக்கிறீர்கள் என்றேன். இப்படி செய்தால், பணம் கொடுத்தவர்களுக்கும் மனதளவில் ஒரு விடுதலை கிடைக்கும். உங்களுக்கும் மனதளவில் சரியான பாதையில் செல்கிறோம் என்ற எண்ணம் வரும். வட்டி தொழிலே செய்ய வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்ததற்கு பதிலாக அந்த 15 சதவீத பேரிடம் இருந்து பணம் வரவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள் என்றேன். நீங்கள் பணத்தை கேளுங்கள். கொஞ்ச நாளைக்கு பிறகு கொடுப்பார்கள் ஆனால், அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அவர்களைத் துன்புறுத்தவோ அவர்களின் பொருட்களை எடுக்கவோ தேவையில்லை. மொத்தமாக தரவில்லை என்றால் கொஞ்ச கொஞ்சமாக கேளுங்கள் என்றேன். மற்றவர்கள் உங்களிடம் பணம் வாங்கும் போது எப்படியாவது திருப்பி கொடுத்துவிட முடியும் என்ற எண்ணத்தில் தான் வாங்குகிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை என்றாக மனிதாபிமானம் தான் முதலில் வரவேண்டும். மொத்தமாக தரவில்லை, கொஞ்ச கொஞ்சமாக வாங்கி மனிதாபிமானம் காட்டலாம். 

நீங்கள் பணத்தையும் போட்டு, அதிலிருந்து பணத்தையும் சம்பாரித்து இப்படி ஒரு குற்ற உணர்ச்சியுடன் இருப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து உங்களுக்கு மகிழ்வாக இருக்கக்கூடிய விஷயமாக செய்யலாம். இதை ஏன் செய்யக்கூடாது என்ற கேட்டதற்கு பிறகு, நிறையவே யோசனை செய்துவிட்டு யோசித்துப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இரண்டு வருடங்கள் கழித்து அவரை எதார்த்தமாக பார்க்க வேண்டியிருந்தது. அவர் உடனே என்னிடம் கை கொடுத்துவிட்டு பேசினார். பணத்தை திருப்பி கொடுக்காதவர்களிடம் இன்னமும் பணம் தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால், பொருள் எதுவும் எடுக்காமலும் துன்புறுத்தியும் இல்லாமல், கண்டிப்பாக இருந்து அந்த பணத்தை கொஞ்ச கொஞ்சமாக வாங்குகிறேன். ஆனால், சரியாக பணம் கொடுத்தவர்களிடம் கடைசி இரண்டு மாத வட்டியைத் திருப்பி வாங்க வேண்டாம் என்று நீங்கள் சொன்னது எக்ஸ்லெண்ட் சார். சரியாக பணம் கொடுப்பவர்களுக்கு கடைசியாக இருக்கும் மகிழ்ச்சி, என்னை நன்றாக தூங்க வைக்கிறது. முதலிலேயே உங்களை பார்த்திருந்தால், என் மகளை காப்பாற்றிப்பேன் எனக் கூறினார். அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து அவர் இப்போது கொஞ்ச கொஞ்சமாக சரியாக வந்துவிட்டார். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு பெரிய ஆளாக ஆவதை விட வட்டியை சரியாக கொடுத்தால் நம்மை மனிதனாக மதிப்பான் இவன் என நினைத்து அதை செய்து பெரிய ஆளாகிவிடுங்கள்.