Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #07

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

iraval edhiri part 7

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

மேகா தன் பெட்டியைத் திறந்து பொருட்களை அடுக்கிக் கொண்டு இருந்தாள் அலமாரியில்! சிறு பிள்ளையில் இருந்தே வாழ்ந்த வீடுதான் என்றாலும் ஒரு சிறு விலகலை திருமணம் கொண்டு வந்திருக்கிறது என்பது நகைமுரண். சராசரியான தாம்பத்திய வாழ்க்கையை அவள் மாறனுடன் மேற்கொண்டு இருந்திருந்தால் இப்படியொரு விலகல் தோன்றியிருக்காமல் போயிருக்கலாமோ?

 

லேப்டாப்பை எடுத்து மேஜையின் மீது வைத்தாள் ஸ்கீரின் ஓப்பன் ஆகி விஷ்வா குழந்தையாய் சிரித்தான். மெயிலை தொட்டதும். நான்கைந்து செய்திகள் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. அவளுடைய டீம் மெம்பர்ஸ் நாளை இரவு கிளம்புவதாகவும் மாலிற்கு ஒட்டினாற்போல ஒரு பிளாட்டில் அவர்கள் தங்க ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இண்டீரியர் ஒர்க் ஆரம்பித்து பாதிக்கும்மேல் ஆகிவிட்டது. நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய வேலைகள் என்று சிறு பட்டியல் ஒன்றை ஜி.எம் அனுப்பியிருந்தார். அனைத்திற்கும் பதில் தகவல்களை அனுப்பிவிட்டு விரல்களை நெட்டி முறித்தாள். லேப்டாப்பில் நோட்பேடை ஓப்பன் செய்து நாளை முதலில் ஆரம்பிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டாள்.

 

காற்று ஜன்னலின் திரைச்சீலையை மீறி அவளை நனைத்தது. வேப்பமரத்தின் வாசமும் அதனோடு இழைந்தது. அம்மா கையில் சூடான எதையோ எடுத்து வந்தாள். ஹாலில் டிவியின் இரைச்சல், காணாமல் போன மாணவர்களின் நிலையைப் பற்றி உருக்கமாக விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். ‘இரண்டு பிள்ளைகள் இறந்த நிலையில் ஒரு மாணவன் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருக்கிறான். கேஸ் சிபிஐக்கு மாறிய பிறகும் இத்தனை மெத்தனம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் அரசு, சட்டம், போலீஸ் என்று யாரையும் நம்ப முடியாது.’ என்று பொதுமக்கள் தொடர்பாக ஒருவர் காரசாரமாகப் பேசிக் கொண்டு இருக்க, பாதி மூடியிருந்த கதவை அகல விரித்து உள்ளே வந்த அம்மாவின் கரங்களில் காபி இருந்தது.

“என்ன மேகா வேலை பார்க்கிறீயா?” காபி தம்ளர் கைமாறியது.

“மெயில் செக் பண்றேம்மா நாளையிலிருந்து போகணும். விஷ்வா எங்கே?”

“பரிதியோட விளையாடிட்டு இருக்கான். உங்க அண்ணியும் அண்ணனும் வீட்டிலே இல்லை அவ பக்கத்துல ஏதோ உறவுக்காரங்க விசேஷம்ன்னு போயிருக்காங்க. எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும் மேகா.” சொல்லிவிட்டு மகள் ஒப்புக்கொள்வாளா மாட்டாளா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் அம்மாவிடம்,

“என்கிட்டே பேச என்னம்மா பர்மிஷன் உனக்கு?” என்றாள்.

“நாம பார்த்து நல்லது கெட்டது செய்த பிள்ளைங்க ஒரு கட்டத்திற்கு உயரம் வந்தபிறகு எல்லாத்துக்கும் அவங்களை எதிர்பார்க்கிற நிலைமை பெத்தவங்களுக்கு வந்திடறதே. அதிலும் சொந்தக்கால்ல நிக்கிற பிள்ளைங்கன்னா தன்னோட வாழ்க்கைக்குள்ளே அபிப்ராயம் சொல்லக் கூட பெத்தவங்களை அவங்க அனுமதிக்கிறது இல்லை.”

 

அம்மாவின் கரத்தை எடுத்து தன் கரங்களில் புதைத்தாள் அதில் பொதிந்திருந்த இளஞ்சூடு ரம்மியமாக இருந்தது.

“நல்ல வைராக்கியம் மேகா உனக்கு. 13 வருஷம் ஒத்தையாளா புள்ளையும் வைச்சிகிட்டு நாங்களும் இல்லாம தனியா அல்லாடுனியே? உன்னை நினைக்காத நாளில்லை மேகா. இப்பக் கூட, கைக்குழந்தையோட சென்னை வரமாட்டேன்னு பிடிவாதமா நீ பேசினது நினைவுக்கு வருது. நாட்கள்தான் எத்தனை வேகமா போகுது. இப்போவாவது எங்கக்கூட வந்து இருக்கணும்ன்னு தோணுச்சே?”

“ம்....நாட்களுக்கு எந்த கவலையும் இல்லை, நகரும் கடிகார முட்களைப் போல அதுவும் தன் வேலை சரியா செய்யுது. கத்தியில நகரும் நத்தையின் நிலையிலே நான் இருந்தேனே, மாறனோட பிரிவுக்குப் பிறகு நான் என்னை நிலைப்படுத்திக் கொள்ள இந்த தனிமை தேவைப்பட்டது. சென்னையிலேயே அதை செய்து இருக்கலாம் ஆனால் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டி வருமேன்னுதான் நான் பெங்களூர் போனது.”

“ம்...என் வரையில் மாறன் இப்பவும் நல்லபிள்ளைதான். இந்த கால பிள்ளைங்க சின்ன தப்பைக் கூட அனுசரிக்க மாட்டேன்றீங்க? சட்டுன்னு பிரிஞ்சி போற முடிவை எடுத்துடறீங்க? நீ கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம் மேகா. நான் இப்போ பேசறது கூட உனக்குப் பிடிக்காம போகலாம். மாறன்கிட்டே தப்பிக்க மட்டுமல்ல எங்கிட்ட இருந்தும் தப்பிக்கத்தான் நீ பெங்களூர் போயிருக்கே மேகா. நீ உன் சொந்தக் கால்ல நிக்கலாம், பொருளாதாரம், வசதி,வைராக்கியம் எல்லாம் ஒரு கட்டத்திலே நம்மை ஒதுக்கி வைக்கும் மேகா. அப்பத்தான் உன் துணையோட நினைப்பு உனக்கு வரும்.”

“அம்மா.....”

“உன் அண்ணி ரொம்ப நல்லவ. நீ இங்கே வர்றேன்னு தகவல் சொன்னப்ப கூட மேகா நம்ம வீட்டு பொண்ணு. இத்தனை நாள் அவளைத் தனியா விட்டதே தப்பு. அவளோட பிடிவாதத்தை விட்டு இறங்கி இங்கே வர்றேன்னு சொல்றான்னா நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அவளா சொல்கிறவரையில் தொந்தரவு பண்ண வேண்டான்னு எங்ககிட்டே திட்டவட்டமா சொல்லிட்டா?! மகனோட குடும்பம் தழைச்சி ஓங்குது நீ மட்டும் தனிமரமா நிற்பதைப் பார்க்க மனசுக்கு கஷ்டமாயிருக்குடி. மாறன் ஒண்ணும் அத்தனை மோசமான பையன் இல்லை மேகா.”

“அம்மா ....”

“உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஒத்துப் போகாத காரணம் எனக்குத் தெரியலை. ஆனா என் பொண்ணு தப்பா முடிவெடுக்க மாட்டான்னு உங்கப்பாவும், காலப்போக்கில் சரியாகுன்னு நானும் காத்திருந்தோம். நீ இங்கேயிருந்து போனபிறகு கூட மாறன் அடிக்கடி இங்கே வந்தார். அத்தை மேகாவை கண்டுபிடிக்கிறது ஒண்ணும் எனக்கு அத்தனை பெரிய கஷ்டமில்லை. ஆனா எங்களுக்கு ஒரு சின்ன பிணக்கு, அதை தீர்த்து வைக்க என் பக்கம் பெரியவங்க இல்லை. நீங்கதான் உதவணுன்னு நடையா நடந்தாரு. எனக்கு மேகா வேணுன்னு அப்பாகிட்டேயும் உங்க அண்ணன்கிட்டேயும் பேசினாரு, உன் பக்கத்தில் இருந்து ஒரு தகவலும் வராம போகவே இவங்க மெளனம் சாதிச்சாங்க. அதுக்குப்பிறகு அவனோட வரத்து நின்னுபோச்சு. மாறனைப் பார்த்து பல வருஷமாச்சு நீங்க இரண்டு பேரும் ஒண்ணு சேரணும்டி மேகா.”

“அம்மா எனக்கு மட்டும் என் வாழ்க்கையை இழக்கணும்ன்னு ஆசையா? கணவன் மனைவி உறவில் முக்கியம் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும், அது ஆட்டம் கண்டதே?”

“மேகா மாறனை நீ காதலிச்சித்தானே கல்யாணம் செய்துகிட்டே, அவருக்கு வேற யாரோடையாவது...?”

“இல்லைம்மா அவர் அப்படிப்பட்டவர் இல்லை.”

“ஒரு புருஷனை மனைவி வெறுக்கக் காரணம் அந்த துரோகம்தான் அதுவும் இல்லைன்னு சொல்றே பின்ன என்னதான் நடந்தது.”

“அம்மா இப்போ என்னோட நினைப்பு பூராவும் விஷ்வா மட்டும்தான் அவனைத்தாண்டி நான் எதையும் எனக்குன்னு யோசிக்கத் தயாரா இல்லை அதனால அந்த பேச்சை விடுங்க. கொஞ்சநாள்லே நானே எல்லாத்தையும் சொல்றேன் எனக்கு கொஞ்சம் டயம் கொடும்மா. ஆரம்பத்தில் இருந்த மனதைரியம் இப்போ இல்லைம்மா. வேலை பொருளாதாரன்னு அவனை நிறைய தனியா விட்டுட்டேன். என்னோட சின்னவயசுலே நான் அனுபவித்த உறவுகளின் அனுசரனையை என் பிள்ளைக்கு கொடுக்காம விட்ட குற்றவுணர்ச்சி என்னைக் கொல்லுது. பாட்டி தாத்தா மாமான்னு நியாயமான குடும்ப முறையைக் கூட அவனுக்கு தர என்னால முடியலை.”

“தந்தையோட கவனிப்பும், வழிநடத்தலையும் விட்டுட்டுடியே?! மேகா. காலம் எல்லாத்தையும் மாற்றும் இதுக்கா நாம கோபப்பட்டோம், தப்பான முடிவு எடுத்திட்டோமோன்னு யோசிக்க வைக்கும். விஷ்வாவைப் பத்தி கவலைப்படாதே அவன் ஐந்துதான் எப்படியும் வளைச்சிடலாம், தாய்மைக்கு வயசு வித்தியாசம் கிடையாது மேகா, உன் பிள்ளையின் எதிர்காலத்தைக் குறித்து நீ எத்தனை கவலைப்படறீயோ, அதே போலத்தான் நான் என் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படறேன். நீ சின்ன குழந்தையில்லை, விஷ்வாவுக்காக மறுபடியும் ஒரு முறை யோசி.” என்ற அம்மாவின் முகத்தை ஒருமுறை கூர்ந்து நோக்கிவிட்டு அவர் மடியில் சாய்ந்து கொண்டாள் மேகா. அம்மா சொன்னது உண்மைதான் காலம் தான் எத்தனை மாற்றங்களை செய்துவிடுகிறது. எத்தனை மறைத்தாலும் மாறன் இன்னமும் அடி மனதில் அமர்ந்து கொண்டு இம்சித்துத்தானே இருக்கிறான்.

 

மேகாவின் மனம் ஒருபுறம் குழப்பங்களால் சூழப்பட்டுக்கொண்டிருக்க, குழந்தை கடத்தல்காரர்களை பிடிக்க துப்புதுலக்கும் பணிகளில் தீவிரமாகியிருந்தது சிபிஐ.

 

வேந்தன் ஜீப்பில் இருந்து இறங்கி அந்த சிறுவனை கையைப் பிடித்து அழைத்து வந்தான். தட்டுத்தடுமாறி நடந்து வராமல் ஒரே நேர்க்கோட்டில் சீராக அந்த சிறுவன் நடந்து வந்தான். மாறன் திடுமென்று போன் செய்து அவனை அழைத்து வரச்சொல்லியிருந்தது வியப்பை ஏற்படுத்தியிருந்தது வேந்தனுக்கு என்னவாக இருக்கும் ஆனால் காரணம் இல்லாமல் மாறன் சார் ஏதும் செய்ய மாட்டார் என்று புரிந்ததால் வேந்தன் எந்த கேள்வியும் கேட்காமல் அவனை அழைத்து வந்திருந்தான்.

“என்ன சித்தப்பா தீடிர்னு இங்கே கூட்டிட்டு வந்திட்டீங்க?”

“சீனியர் ஆபிஸர் கூட்டிட்டு வரச்சொன்னாங்க சிவா. எதுக்குன்னு இனிமேதான் கேட்கணும்.”

“யார் அவர்?”

“மாறன். என்னோட சீனியர் ஆபிஸர், ஏன்டா தம்பி?”

“இல்லை நான் படிக்கணும். நீங்க புதுசா புக் வேற வாங்கிட்டு வந்து இருக்கீங்க இல்லையா அதனால்தான்”

“சீக்கிரம் போயிடலாம்.” வேந்தன் அந்த சிறுவனின் கையைப் பற்றி அழைத்து வந்தான். முகப்பை அடைந்ததும்,“உங்க ஆபீஸ் எப்படியிருக்கும் சித்தப்பா எனக்கு ஒண்ணுண்ணா சொல்லிட்டே வாங்களேன்.”

“இது கமிஷனர் ஆபீஸ் நிறைய போலீஸ்காரங்க காவல் இருப்பாங்க. அவங்க கையிலே துப்பாக்கி எல்லாம் இருக்கும். வரவேற்பில் இருக்கிறவங்க கிட்டே நாம எதுக்கு வந்திருக்கோன்னு சொன்னா அவங்க நம்மை கமிஷனரின் வசதி கேட்டு அங்கே கூட்டிட்டுப் போவாங்க, அதுவரைக்கும் காத்திருக்கணும்.”

“இங்கே நிறைய செடிகள் எல்லாம் இருக்குல்லை.....”

 

வேந்தன் சற்று நின்று,“உனக்கு எப்படி தெரியும்?”

“அதான் எல்லாத்துக்கும் தண்ணி தெளிக்கிறாங்களே வெயிலோடு அந்த நீர் மண்ணில் கலக்கும் போது ஒரு வாசனை வருமே நம்ம வீட்டுத் தோட்டத்திலேதான் தினமும் அந்த வாசனை வருமே?” கேமரா வழியாக மாறன் அவர்களைப் பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி வந்தான்.

“ஸார் இதுதான் சிவா, என் அண்ணன் மகன் நீங்க இவனை அழைச்சிட்டு வரச்சொன்னீங்களே?” என்று வேந்தன் சொன்னதும் மாறன் இருந்த திசை நோக்கி,“வணக்கம் மாறன் அங்கிள்.” என்றான். அவனின் தலை சற்றே உயர்ந்து மாறனின் முகத்தை நோக்கி பார்வையை வீசுவதைப் போல இருந்ததை மாறன் குறித்துக் கொண்டான்.

 

மாறன் கரங்களை அவனை நோக்கி நீட்டி கை பிடித்துக் குலுக்கினான். 

“அங்கிள் நீங்க எங்க சித்தப்பாவை விடவும் நல்ல உயரமாக இருக்கீங்க?”

“எப்படி கண்டுபிடிச்சே?”

“என்னோட கை அளவு உங்கிட்டே கை குடுக்கும் போது உயர்ந்தே அதை வைச்சித்தான். நீங்க நல்லா உயரமா இருப்பீங்கன்னு தெரிந்தது. உங்க உயரம் 6.2 சரியா இருக்கா? அதுவும் உங்க கை அளவை வச்சித்தான். என்னோட உயரத்துக்கும் நீங்க கை நீட்டின அளவினையும் அந்த இடைவெளியையும் கணக்கிட்டாவே போதுமே?!”

“சூப்பர் சிவா உனக்கு நல்ல அப்சர்வேஷன் பவர் இருக்கு.!”

“கண்களில் பார்க்க முடியாததை நான் மனக்கணக்கில் பார்க்கிறேன் அவ்வளவுதான் ஸார். உங்களுக்கு டைம் இருந்தா இந்த இடம் பற்றி கூட என்னாலே சொல்ல முடியும்.”

“சொல்லேன்...”

“நான் காரை விட்டு இறங்கியதும், இரண்டு பக்கமும் செடிகள் இருந்தது. நம்மைச் சுற்றி நாலு போலீஸ் ஆட்கள் நிற்கிறாங்க....நீங்க வரும்போது அவங்க தன்னோட ரைபிளை நகர்த்திட்டு உங்களுக்கு சல்யூட் வைச்சிசாங்க அவங்களோட ஷூ உரசும் சப்தம் சீரான மூச்சுன்னு எல்லாம் தெளிவாத் தெரிந்தது. அப்பறம் தன் காலில் இருந்த காலணியைக் கழட்டினான். இந்த தரை நல்ல பளபளன்னு மொசைக்கு வகையைச் சேர்ந்தது. ஜாக்கிரதையா நடக்கணும் இல்லைன்னா சட்டுன்னு வழுக்கிடும். இப்போதான் டெட்டால் போட்டு சுத்தம் பண்ணியிருக்காங்க போல ஆஸ்பிட்டலில் வர்றாமாதிரி ஒரு வாசனை வருது. இடது பக்கம் டிவியிலே ஏதோ நியூஸ் சேனல்....! எதிர்லே இன்னைக்கு ட்யூட்டியிலே ஒரு லேடி இருக்காங்க அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போனில் பேசும் போது கவனிச்சேன். நாம இப்போ கமிஷனரை பார்க்க வந்திருக்கோன்னு சித்தப்பா சொன்னாங்க. அவரோட அறை அநேகமா இடது பக்கத்தில் இருந்து ஒரு பத்து பதினைந்து அடி இருக்கிற லிப்டுக்கிட்டு இருந்து தொடரும். ஏன்னா நீங்க வரும்போது, வேந்தன் வந்தாச்சான்னு கேட்கிறதுக்கு முன்னாடி லிப்ட்டில வர்ற சின்ன பீப் சத்தம் கேட்டது. அதுக்கு பிறகு சரியா 30 விநாடிகளில் நீங்க வந்திட்டீங்க ஸோ நான் சொன்னது எல்லாம் சரியா அங்கிள்.”

 

மாறன் வாய்பிளந்து நின்று கொண்டிருந்தான். அவன் சொன்ன அத்தனையும் சரியாய் இருந்தது. “கிரேட் மை பாய். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சிவா. இன்னையில் இருந்து நீ என் பிரண்ட் சரியா?!” அச்சிறு கைகளைப் பற்றிக் குலுக்கினான். “வேந்தன் இந்த குட்டிப்பையன் நிச்சயம் பெரிய ஆளா வருவான் பாருங்க....!”

“தேங்யூ ஸார்.”

“அங்கிள் எனக்கும் உங்களை மாதிரி சிபிஐல சேரணுன்னு ரொம்பவும் ஆசை. ஆனா.....”

“உன்னால முடியும். அதுக்குண்டான எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். விக்ரம் இன்னும் படிச்சு பெரிய ஆளா வரணும். அதுக்கு முன்னாடி இப்போ உன்னோட ஐக்யூக்கு இன்னொரு டெஸ்ட் நீ ரெடியா?”

 

சிறுவன் உற்சாகமானான்.“நான் ரெடி அங்கிள் என்ன செய்யணும்.?”

 

மாறன் வேந்தனிடம் திரும்பினான் ‘வாங்க’ என்பதை போல சைகை காட்டி லிப்டில் ஏறி மூன்றாவது தளத்தை அடைந்தார்கள். “நம்ம கேஸ்லே ஒரு முக்கியமான க்ளூ கிடைச்சிருக்கு என்னன்னா? கடத்தப்பட்டு இறந்து போன பசங்களோட பிரேத பரிசோதனை அறிக்கை வந்திட்டது. அதில் ஒரு விசித்திரமான விஷயம், இறந்து போன பிள்ளைகளோட கைவிரல் நகங்களில் சிறு சிறு புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் போடப்பட்டு இருக்கு. எனக்கு அது கண்தெரியாதவர்கள் படிக்கிற பிரெய்லி வார்த்தைகளைப் போல தோணுது. மேபி அது சரியான்னு செக் பண்ணலான்னு தான் சிவாவைக் கூட்டிட்டு வரச்சொன்னேன்.”

“அவனால முடியுமா ஸார்? சொல்லியிருந்தா அவங்க டீச்சர் யாரையாவது கூட்டிட்டு வந்திருப்பேனே?”

“எனக்கு கொஞ்சநேரத்திற்கு முன்னாடி அந்த சந்தேகம் இருந்தது வேந்தன். இப்போ சத்தியமா இல்லை. அதுவும் விஷயம் வேற யார்மூலமாகவும் வெளியே போகக் கூடாது.” அவர்கள் கமிஷனரின் அறைக்கு முன்பு வந்திருந்தார்கள். கதவைத்தட்டி அனுமதி கேட்டு பெற்ற பின் உள்ளே நுழைந்தார்கள்.

“இந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வை இன்னும் கொஞ்ச நேரத்திலே தர்றேன்னு” சொன்ன மாறன் ஒரு பத்து பணிரெண்டு வயதில் சிறுவன் ஒருவனோடு உள்ளே நுழைவதைக் கண்ட கமிஷனரோ குழப்ப முடிச்சிகளை பற்றிக்கொண்டு வந்தார்.

 

தொடரும்...

 

- லதா சரவணன். 

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #14

Published on 25/07/2022 | Edited on 04/08/2022

 

iraval edhiri

 

வெல்கம் டூ அலைகள் நியூஸ் சானல் நான் உங்கள் ஷோபா இன்னைக்கு நாம பேசப்போறே விஷயம் அவசியமானது மட்டுமல்ல கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட, இக்கட்டான ஒரு காலகட்டத்தை கடந்து வந்தாலும் அதோட வடுக்கள் ஆழமாக இறங்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் பொருளாதாரம், மனசிதைவு, சிறுதொழில் இழப்புன்னு நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறோம். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நம்ம எல்லாருக்கும் பெரிய சவாலா அமைந்த பல விஷயங்களில் ஒன்று ஆன்லைன் பள்ளிக் கல்லூரிப் படிப்புகள்.

 


அதை பேஸ் பண்ணி ஆன்லைன் அலப்பறைகள்ன்னு நிறைய வீடியோஸ் நகைச்சுவையா வந்தாலும் உண்மையில் இந்த ஆன்லைன் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எதை அவர்கள் கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதையே கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட பெற்றோர்கள் 
மன அழுத்தத்திற்கு நிறைய மாணவர்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் பிரபாகர் அவர்கள் வணக்கம் சார்.

 

பிரபாகர் அந்தக்கால கமலஹாசனை நினைவு படுத்தினார். வசீகரக் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்திருந்தாரோ என்னமோ ?! அடிக்கடி அதை மூக்கின் மேல் தூக்கிவிட்டு கொண்டது கூட ரசனையாய் இருந்தது. 

 

வணக்கம் என்று கேமிராவைப் பார்த்து கையை குவித்தவர். ஷோபாவைப் பார்த்து பேச ஆரம்பித்தார். எதையும் தொட்டு உணரும் நிலை உன்னதமானது இல்லையா ?! பல வார்த்தைகள் பேச முடியாத விஷயத்தை ஒரு மெளனமும் தொடுதலும் கொடுத்துவிடும் ஆனா ஆன்லைன் கலாச்சாரம் உள்ளே நுழைந்ததும், எல்லாம் மாறிப்போனது. ஒரு பெட்டிகடையை எடுத்துக்கோங்க அந்த தெருவில் உள்ள அத்தனை பேரையும் அந்தக் கடைக்காரருக்கு தெரியும், இன்றைய கூகுள் மாதிரி எந்த வீட்டில் யார் இருக்காங்க என்ன செய்யறாங்கன்னு நிறைய தகவல்கள் மனிதர்களைப் படித்து வைத்திருந்தாங்க ஆனா எல்லாமே ஆன்லைன் ஆனபிறகு, நான் ஆன்லைனில் வாங்கினேன் இப்போ எல்லாம் நேரா யாருப்பா நேரத்தை செலவு பண்ணிட்டுப் போறாங்க ரிலாக்ஸா எல்லாத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கிக் கொள்றது எத்தனை செளகரியம்ன்னு பேசறது பெரிய பேஷனும் கெளரவமும் ஆகிட்டது. 

 

இப்போதைக்கு உலகமே இதில் தான் இயங்கிட்டு வர்றது இந்த வசதிகள் தப்புன்னு சொல்றீங்களா ஸார் ?

 

விஞ்ஞானம் வளரவளர மனிதம் சுருங்குது பார்த்தீங்களா ? வெறும் தொடுதிரையில் ரசிக்கும் பழக்கம் விடுத்து நாலு கடை ஏறி இறங்கி காய்கறியோ பொருளோ வாங்குங்க அங்கே எத்தனை வார்த்தைகள் வலம் வரும். நம்மையும் அறியாம எத்தனையோ கற்றுக் கொள்ளலாம் ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரம் இருக்கலை. அதனாலதான் வளரும் சமுதாயம் வெளிப்படையா பேச தயங்குது. தனக்கு என்ன வேணுன்னு கூட கேட்கத் தெரியாத மனித குலம் உருவாகுது. அதைச் சுற்றிலும் விளம்பர விரல்கள் ஆக்கிரமிக்கிறது. என் தேவைகள் அடுத்தவனின் விருப்பமாக போகிறது. அப்பா அம்மா சொன்னா அநேக விஷயங்களில் எதிர்த்துப் பேசும் பிள்ளைகள் முகம் தெரியாத யாரோ ஒருத்தர் சொன்னா இதுதான் எனக்கானதுன்னு சட்டுன்னு எடுத்துக்கிற அளவுக்கு அவங்களைப் பழக்கப்படுத்தி வைச்சிருக்கு இந்த இணைய உலகம்
சரியா சொன்னீங்க சார் ? இதனால என்ன பாதிப்புகள் வருது.

 

இப்போதைக்கு பாதுகாப்பு நமக்கு வெளியே இல்லை நமக்கு உள்ளேயேதான் யாரும் யாரையும் கண்காணிக்க முடியாது தனி மனிதனோட ஒழுக்கம் மட்டும்தான் அவர்களை சீர்படுத்தும் கத்தியின் முனை கூர்மையாத்தான் இருக்கு அதன் பாகத்தின் பாதுகாப்பினை நாம உணர்த்தணும் அங்கே தவறுவதால்தான் நிறைய காயங்களை உள்ளே எடுத்துக்கிறோம். கண்பார்வைகள் கோளாறு அதிகமாகுது. நிறைய பிள்ளைகள் வாதத்தினால் பாதிக்கப்படுவதாக ஆர்த்தோ டாக்டர்கள் சொல்றாங்க. ஆடி ஓடி விளையாடி அடிபட்டு கத்துக்க வேண்டியவைகளைக் கூட இப்போ திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு கற்பனையிலேயே வாழ்க்கை அமைவது அவர்களின் புலன்களை மட்டுமல்ல மனதையும் மந்தப்படுத்துகிறது. 

 

சமீப காலமா மாணவர்களின் தற்கொலை செய்திகள் அங்கொன்னும் இங்கொன்னுமா படிக்கிறோம், நான்கு பேர் காணாமல் போயிருக்காங்க இப்படி எத்தையோ பிரச்சனைகள் இதுக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும் ஸார். 

 

மறக்கமுடியாத இணைப்புகளை நாம பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தாச்சி, தவறுகளை இலகுவாக கத்துக்க சந்தர்ப்பங்களை வலைவிரிச்சி கொடுக்கிறோம். அவர்களுக்கு அக்கறையும், அன்பையும் கொடுக்கணும். இயந்திரங்களை விடவும் அப்பாவும் அம்மாவும் நமக்கு அநேக அன்பைத் தருவாங்கன்னு உணர வைக்கணும். கண்காணிப்பது தெரியாமயே அவங்க தப்பைச் சுட்டிக் காட்டணும். உண்மையைச் சொல்லணுன்னா அப்பாஅம்மாக்கு பயந்தாற்போல நாம பெத்த பிள்ளைகளுக்கும் பயப்படும் ஜெனரேஷன் நாமகாத்தான் இருப்போம். 

 

ரொம்ப அழகா சொன்னீங்க சார் ? நீங்க சொன்னாற் போல விளம்பரங்கள் இலவசங்கள் கவர்ச்சியான அறிவுப்புகள்னு எல்லாம் விற்பனை மயமாகவே போயிட்டது. யாரை எப்படி பயன்படுத்தலான்னு யோசிக்கும் மனநிலைக்கு எல்லாரும் வந்தாச்சு. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு விளம்பர அறிவிப்பினைக் கேட்டேன். வளர்ந்து வரும் மாலில் ஒரு கேம் கம்பெனி தன்னோட கிளைகளை திறக்கிறாங்க. மாணவர்கள் தான் அவர்களின் டார்கெட். வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மாதிரி அறிவிச்சியிருக்காங்க. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, கேம் ஷோல நிறைய பரிசுகள் இருக்காம். ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுக்கள் கோலோச்சிக்கிட்டு இருக்கும் போது இந்த அறிவிப்பின் தாக்கம் எப்படியிருக்குன்னு நாம அடுத்த வீடியோவில் பார்க்கலாம் அதுவரையில் சைனிங் ஹாப் ஷோபா மற்றும் நம்ம வேலியபுள் கெஸ்ட் மருத்துவர் பிரபாகர் அவர்கள். திரை அணைக்கப்பட்டது. 

 

எங்கே ஆரம்பிக்க போறாங்க ? அந்த வீடியோகேம்.

 

மாயா தன் மொபைலை உயிர்ப்பித்து அந்த விளம்பரத்தைக் காட்டினாள். மாறன் அதை கவனித்தான். இந்தவாரம் நாம இங்கே போகணும் மாயா. 

 

ஏன் ஸார் ? ஸாரி சார் கூப்பிடவேண்டான்னு சொன்னீங்க இல்லை, ஏன் மாறன் ?

 

ஜஸ்ட் பார்க்கணுன்னு தோணுது. என் உள்ளுணர்வு எச்சரிக்கிறது நிச்சயம் அங்கே ஏதாவது ஒரு லீட் கிடைக்கலாம். மாயா இப்போ நாம போற இடம் சமீபத்திய துக்கத்தை விழுங்கியிருக்காங்க கொஞ்சம் பார்த்துப் பேசணும்.

 

என்னோட பேச்சு உபகரணங்களோடதான். அதனால் நீங்க கவலைப்படவேண்டாம். கார் அந்த காம்பெளண்டை தொட்டது. 

 

மாறன் அந்த வீட்டின் வாயிற்படியில் சற்றே தயங்கித்தான் நின்றிருந்தான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று பெரும் மனக்குழப்பம் எழுந்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு வாசல் முழுவதும் குத்தகைக்கு எடுத்திருந்த காலணிகள் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தன. வீடு பிடிக்காத ஒரு மெளனத்தைப் பூசிக் கொண்டு இருந்தது. 

 

 

பக்கத்து பிளாட் பெண்மணி மெல்ல எட்டிப்பார்த்து மாறனைக் கண்டதும் சட்டென்று தலையை இழுத்துக் கொண்டாள். தனக்கேன் வம்பு என்பதாகக் கூட இருக்கலாம். 

 

நகர்ப்புறங்களில் நத்தையாய் இம்மாதிரிக் கட்டிடங்களுக்கு சுருண்டு கொள்ளும் மனிதர்களின் மத்தியில் மனிதத்தை எதிர்பார்ப்பது என்பது ஆழ்கடல் முத்தை தேடுவதைப் போலத்தான் அதில் கூட மனிதன் வெற்றிப் பெறுகிறான் ஆனால் மனிதத்தில் தோற்றுப் போகிறான். அட என்ன இப்படியே நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா உங்க உடம்பு என்னாகுறது ? எழுந்து வேலை வெட்டியப்பாருங்கய்யா ? ன்னு கலயத்தில் கஞ்சியைக் கொண்டு வந்து நீட்டும் மனிதர்கள் இப்போது இல்லை. கிராமப்புறங்களில் கூட சற்று விநோதமான நகர கைகள் வளைத்துவிட்டது. 

 

கோலம் அடைத்த வாசலில் எல்லாம் அதன் வண்ணங்களைக் கலைப்பதைப் போல வாகனங்களின் கால்தடங்கள் பதிய துவங்கிவிட்டது. ஆதிச்ச நல்லூரைப் போல இதுநான் எங்கள் காலம் என்று நாம் ரசித்து வாழ்ந்த பக்கங்களை மண்ணுக்குள் தேடும் காலம் விரைவில் இல்லை என்ற நிஜம் நெஞ்சை அழுத்தியது. கூலர்ஸை கழட்டினான். 

 

தொட்டதும் திறப்பதைப் போன்று இருந்த கதவை அலட்சியம் செய்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். சாத்தலைங்க திறந்துதான் இருக்கு.

 

நான் மாறன் இவங்க மாயா இரண்டுபேரும்

 

 தெரியும் ஸார் அன்னைக்கு என் பேரனுடைய கடைசி நாளில் பார்த்தேனே ?!

 

மன்னிக்கணும். எனக்கு இந்த நேரத்தில் உங்களை வந்து தொந்தரவு செய்ய கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் ஏற்கனவே நான்கு பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்க அதில் இரண்டுபேர் இப்போ உயிரோடவே இல்லை, ஒரு பையன் கிடைச்சும் பலனில்லை. 

 

தம்பி அதுக்கும் என் பேரனோட இறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?! அவன் தற்கொலை இல்லை பண்ணியிருக்கான். அவர் அந்த வார்த்தையைச் சொல்லும் போது உடைந்து அழத் தயாராய் இருப்பதைப் போல இருந்தது. 

 

ஸார் நடந்து போன சம்பவத்துக்கும் உங்க பேரனின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கலாம் ஆனா இறந்த போன உங்க பையனுக்கும் அந்த பிள்ளைகளுக்கும் வயது ஒண்ணுதான் காணாமல் போன பையனும் இவனும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறாங்க. எனக்கு அவனோட அறையை மற்றும் அவனின் பொருட்களை கொஞ்சம் பார்க்கணும். 

 

அன்னையிலே இருந்து அது பூட்டித்தான் இருக்கு. நிற்க நேரமில்லாத என் மகனும் அவன் மனைவியும் கூட இப்போ இதோ பக்கத்து அறையில் முடங்கிக் கிடக்கறாங்க. திறந்துதான் இருக்கு போங்க என்று மாறன் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த அறையைக் காட்டினார். மாறனும், மாயாவும் எழுந்தார்கள். 

 

அந்த அறையை நோக்கி கடக்கும் போதே மெல்லியதாய் முனகல் சப்தம். ஏங்க கார்டுலே கடனாயிடுச்சின்னு அவனைத் திட்டாதீங்க என்னோட நகை இருக்கு நான் வைச்சித்தர்றேன் இல்லைலேன்னா ஆபீஸ்லே லோன் போட்டுத் தர்றேன் பாவம்ங்க அவன்

 

சரிம்மா நான் திட்டலை இப்போ நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று ஒரு ஆண் குரல் சமாதானப்படுத்தியது. பெரியவர் கதவைத் திறந்து உள்ளே சென்று, சிறிது நேரத்தில் அந்த குரலுக்குச் சொந்தகாரன் ஆன மனிதன் வெளியே வந்தான்.

 

நீங்க....

 

நான்தான் அவனோட அப்பா அவர் சுட்டிக்காட்டிய திசையில் சில தினங்களுக்கு முன்பு அதுவா இருந்த அச்சிறுவன் அவனாகச் சிரித்துக் கொண்டு இருந்தான். 

 

வாங்க என்று அறைக்குள் அழைத்துச் சென்றார் அவர். முகத்தில் சில நாட்களின் தாடி முளைத்திருந்தது. கண்களில் சொல்லொண்ணா சோம் துளிர்த்திருந்தது. 

 

அறைக்குள் நுழைந்தார்கள். மாயா தன் போனில் நோட்பேடைத் திறந்தாள். அறையை சுற்றிலும் ஒரு பார்வையிட்டு சில குறிப்புகளை எழுதிக் கொண்டாள்.

 

அறை முழுவதும் பணத்தின் செழுமை படர்ந்திருந்தது. விலையுயர்ந்த படுக்கை, கிரிக்கெட் பேட், சுவரோரமாய் கம்ப்யூட்டர் அதன் அருகில் சுவரின் பிளக்பாயிண்ட்டில் மொபைல் போன்களுக்கு உயிரூட்டும் சார்ஜர்கள். சுவரில் பெரியதாக கோலியும், டோனியும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறு அலமாரியில் சில பொம்மைகள் அதன் நடுவில் பாடப் புத்தகங்கள் பக்கத்தில் ஒரு மொபைல் போன் அநாதையாய் கிடந்தது. 

 

இது....

 

என் பையனோட போன். ஆன்லைன் கிளாஸ்க்காக வாங்கித் தந்தது. 

 

போலீஸ் இதை எடுத்துப் போகலையா ?

 

இல்லை ஸார் அவன் இறந்தப்போ போலீஸ் வந்து விசாரிச்சப்போ இது எங்கே இருந்ததுன்னே தெரியலை நேத்து அவனின் ஈமக்காரியங்களுக்காக அவன் உபயோகிச்ச பொருட்களை எடுக்கும் போது கிடைச்சதுன்னு வேலைக்காரம்மா கொண்டுவந்து கொடுத்தாங்க. 

 

மாயா அதைக் கையில் எடுத்தாள் நான் காஸ்ட்லியான வஸ்த்து என்று அது சிரித்தது. சார்ஜர் பாதி தீர்ந்து போயிருக்க தொடுதிரையில் செக்யூரிட்டி வளையம். 

 

பாஸ்வேர்டு ....

 

எனக்கு தெரியாது ஒருவேளை என் மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் ஆனா எதையும் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. ஒரே பையன்னு செல்லம் கொடுத்து அவனுக்காகவே கால நேரம் பார்க்காம உழைச்சோம் சார் ஆனா பாருங்க எல்லாத்தையும் .....!

 

உங்க வருத்தம் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அவன் எப்படி ரொம்ப மூடி டைப்பா இல்லை நல்லா பேசுவானா ? 

 

ரொம்ப பேசமாட்டான் ஸார். அவனுக்கு பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அவளோட உடல்நிலை ஒப்புக்கலை அதனால இவன்தான் எங்களுக்கு எல்லாமா இருந்தான். இங்கே நின்றால் எனக்கு அவன் நினைவு அதிகமாக வருகிறது என்று நகர்ந்தவர் உங்களுக்கு குடிக்க ஏதாவது என்று கேட்டார்.

 

வேண்டாம் ஸார் .... என்றனர் ஒரே குரலில் கோரஸாய் மாறனும், மாயாவும்.

 

அதேநேரம் வாசலில் ஒரு அரவம் கேட்டது. ஒரு சிறுவன் அங்கிள் கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம் உங்க வீட்டு பால்கனியில் எங்க பால் விழுந்திட்டது என்ற குரல். மாறன் அக்குரலில் ஈர்க்கப்பட்டு வெளியே வந்தான். 

 

பால்கனிப் பந்திற்காய் காத்திருக்கும் ஆர்வம். நீளமான டிராக்ஸூம், மஞ்சள்நிற டீ-சர்ட்டும் அணிந்திருந்தான். பேட்டை தாங்கியபடி அவன் சற்றே சாய்வாய் நின்றிருந்த விதம் மாறனுக்கு எதையோ நினைவூட்டியது. அந்த சிறுவனின் உருவம் அவனைப்போல தோன்ற மெலிதாய் ஒரு ஈர்ப்பு எட்டிப் பார்த்தது. விசாரிப்பதற்குள் தான் தேடி வந்த பொருளைப் பெற்றுக் கொண்டு தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினான் அவன்.

 

மாறன்...இங்கே வாங்களேன் மாயாவின் குரலில் வழிந்த டெசிபல் அவனை பின்னோக்கி நகர வைத்தாலும் மனம் முழுக்க அச்சிறுவன் வியாபித்திருந்தான்.
 

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #13

Published on 13/07/2022 | Edited on 04/08/2022

 

tt

 

‘முட்டாள்’ என்ற வார்த்தைகளும் நீரஜ்ஜின் சாபமும் இணைந்து கொண்டதோ என்னவோ, ரதி டெக்ஸ்டைல்ஸின் வாசற்படி டைல்ஸ் தன் மடியில் மைக்கேலை வாங்கிக் கொண்டது. தன் கேபினின் ஜன்னல் வழியாக மதன் எட்டிப்பார்க்க கூடவே நீரஜ்ஜூன் கண்களும் சேர்ந்து கொண்டன. அவனின் உதடுகள் கோபத்திலும், அவமானத்திலும் நடுங்கிய மைக்கேலின் உடலைப் பார்த்து மீண்டும் ஒருமுறை ‘முட்டாள்’ என்று கூறிக்கொண்டன.
 
“யார் அவன்? உனக்குத் தெரியுமா நீரஜ்?”
 
நண்பன் சில மணித்துளிகளுக்கு முன்புவரையில் இந்த பகுதிக்கு நான் தேர்ந்த கமெண்டர்களில் ஒருவன். நேர்மை நியாயம் என்ற பேசிவிட்டு இப்போது அடிபடுகிறான்.
 
“பேசிப்பார்க்கலாமா?”
 
“வாய்பில்லை மதன் நான் நிறைய பேசினேன் அவன் எதற்கும் ஒப்புக்கொள்வதாக தெரியவில்லை, நன்றாக வாழ்ந்து கெட்டவன். பாதிப் பட்டினியிலும் நாணயம் போகவில்லை.”
 
“நீரஜ், இம்மாதிரி ஆட்கள் மனசாட்சிக்குப் பயந்தவர்கள், இவர்களை இலகுவாக வளைத்து விடலாம்.” மதன் தன் இண்டர்காமை எடுத்து யாரிடமோ பேசினான். தயங்கித் தயங்கி தன் காயங்களையும் கலைந்த உடைகளையும் பார்த்தபடியே வெளியேறிய மைக்கேலை நோக்கி இருவர் ஓடினார்கள். மேலும் தன்னை தாக்க வருகிறார்களோ என்று பயந்த அவன் ஓட எத்தனிக்கும் போதே,
 
“ஸார், உங்களை எம்.டி. கூப்பிடறார்.” என்றான் வந்தவர்களின் ஒருவன். மைக்கேல் நம்பாமல் பார்க்க, ரிசப்ஷனில் உட்கார வைக்கப்பட்டான். குளிர்பானம் ஐஸ்கட்டிகள் மிதந்து தரப்பட்டது.
 
“எடுத்துக்கோங்க, என்ன ஸார் எனக்குத்தான் தெரியாது. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லக்கூடாது நான் எம்.டிக்கு வேண்டியவன்னு, என் வேலைக்கே உலை வைக்கப் பார்த்தீங்களே தம்பி?!”
 
பவ்யமாய் அருகில் நின்ற அவரை வியப்பு தடவிய கண்களோடு பார்த்தான் மைக்கேல். சற்று நேரத்திற்கு முன்பு ‘வேலைக்கு சேர வந்த நாளே தாமதம் இதில் அட்வான்ஸ் வேற கேட்கிறே? இதென்ன உங்கப்பன் கட்டிவைச்ச கடையா’ன்னு, கேள்வி கேட்டு வார்த்தை முத்தி, அடித்து வெளியே விரட்டிய மனிதர். கிழிந்த பொட்டலம்போல் தூக்கி வீசியவர். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் மனிதர்கள்தான் சட்டென்று எத்தனை நிறம் மாறுகிறார்கள். மைக்கேல் ஏதும் பேசாமல் அமைதியாய் பார்த்தான். குளிர்பானத்தையும் தொடவில்லை.
 
அதே ஆசாமி, “சின்னவர் மேல கூப்பிடறார்.” என்று பவ்யமாக சொல்லிவிட்டு, ஒரு ஊழியருடன் முதல் மாடிக்கு அனுப்பினான். இதுவரையில் கண்களில் இகழ்ச்சியும் சக மனிதன் அவமானப்படுகிறானே என்ற அக்கறையின்றி உதட்டை கன்னத்தின் கடைக்கோடிவரை இழுத்து சிரித்த அனைவரின் கண்களிலும் இப்போது ஒருவித மரியாதையைப் பார்க்க முடிந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை.
 
பணம் சட்டைப் பையினை மீறி வெளியே எட்டிப்பார்த்தபோது,
 
“சார்... சார் என்ன வேண்டும்?”
 
“மச்சி அங்க போகணும்டா நீ?!” கார் கதவை பவ்யமாய் திறந்துவிட்டு, “வெல்கம் யூ” தலைசரித்து வணங்கியதும், பில்லுக்கு மீறிய டிப்ஸ்க்குகாக அடிவயிறுவரை சரிந்து வணங்கியதும், ‘இதெல்லாம் அந்த மோசமான நாளுக்குப் பிறகு, அப்படியே தலைகீழாக மாறிப்போனதே ஏன்? நான் இப்படி சபிக்கப்பட்டேன்.’
 
“சார் நீங்க உள்ளே போகலாம்...” மீண்டும் அதே பெரியவர்?! மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“ஹாய் மைக்கேல்?!” என்று மதனின் பின்னால் நின்று குரல் கொடுத்த ராஜீவ்வைப் பார்த்தவுடன் தனக்கு கிடைத்த மரியாதையை சட்டென்று புரிந்து கொண்டான் மைக்கேல். அன்று ஆரம்பித்த பழக்கம். இந்த இழிநிலையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறு இல்லைன்னு மனசுக்குள்ளே தோண ஆரம்பிச்சது.
 
“இரண்டு வருஷம் இப்படியே போச்சு அதற்குப்பிறகுதான் பிரச்சனையே?”
 
“அப்படியென்ன தொழில் பண்ணீங்க? கள்ளக்கடத்தலா?”
 
“இல்லை நவீன தொழில் நுட்பங்களோடு நூதனமா ஒரு திருட்டு.” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான் மைக்கேல்.
 
தன் வீட்டின் முன்னால் வந்து நின்ற வேனைப் பார்த்து அம்மா அதிசயித்தாள், மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“இந்த பிரிட்ஜ், கேஸ் ஸ்டவ் எல்லாம் கிச்சன்லே வைச்சிடுங்க. அப்பறம் அந்த மர பீரோவை எடுத்துட்டு புது பீரோவை வைங்க. சோபா இங்கே சுவரோரமா இருக்கட்டும். டிவி கூட, செல்ப்பில் வேண்டாம் சுவற்றில் அடிச்சிடுங்க...” தன் முன்னால் நின்ற நான்கைந்து இளைஞர்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் மைக்கேலை அம்மாவும், தங்கையுமாய் ஆர்வமாய் பார்த்தார்கள்.
 
“என்ன மைக்கேல் இது? அண்ணா புது டீவியா ஏதுன்னா காசு?”
 
“பிரண்ட் ஒருத்தனோட சேர்ந்து புதுசா தொழில் தொடங்கியிருக்கேன்.” வேலைகளை மேற்பார்வையிட்டபடியே சொன்னவன்.
 
“புது தொழிலா? மூலதனம் இல்லாம எப்படி மைக்கேல்?!” அம்மாவின் சந்தேகப் பார்வையைத் தவிர்த்துவிட்டு,
 
“உலகத்திலே எல்லாரும் கெட்டவங்களா இருக்கப் போவது இல்லைம்மா, நாம நல்லாயிருந்தப்போ நம்மால யாரோ ஒருத்தர் பயன்பட்டு இருப்பாங்களே அவங்களில் ஒருத்தன்தான் இவன். எப்படியோ நம்ம கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போச்சு இன்னும் நல்ல லாபம் வந்தா சொந்தமா வீடு வாசல்லன்னு செட்டில் ஆகிடலாம் தங்கச்சிக்கு நல்ல இடத்திலே கல்யாணம் செய்யலாம். முதல்ல இந்தா பிடி இதிலே இருபத்தைந்தாயிரம் இருக்கு வீட்டுவாடகை கரண்ட் பில் எல்லாம் செட்டில் பண்ணு.” மைக்கேல் அம்மாவின் கரங்களில் திணித்துவிட்டு தங்கையிடம் ஒரு பார்சலைத் திணித்தான்.
 
“இனிமே கிழிந்ததை தச்சிக் கட்டிக்க வேண்டாம் ஐந்து சல்வார் இருக்கு அடுத்த மாதம் உன்கிட்டே பணம் தர்றேன். வேணுங்கிறதை வாங்கிக்க.” என்று புதியதாக கவர் பிரிக்கப்படாமல் இருந்த சோபாவில் அமர்ந்தான் மேலே உறையாய் இருந்த பிளாஸ்டிக் கவர் நசுங்கி சிணுங்கியது அவனின் மனதைப் போலவே?!
 
கண்ணாடித்தடுப்புகளுக்கு நடுவில் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் மைக்கேல் அவனின் லேப்டாப்பின் தொடுதிரையில் பிரபல மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளின் டேட்டா பேஸ். அவற்றை எடுத்து எக்ஸலில் அப்பலோட் செய்துவிட்டு, க்ரூப் கால் கனெக்ட் செய்தான்.
 
“உங்க மொபைல்ல நம்ம குரூப்-க்கு தகவல்கள் எல்லாம் அனுப்பியிருக்கேன் இன்னும் நாலைந்து நாளுக்கு இந்த டார்கெட்ஸ் எல்லாம் முடிக்கணும்.”
 
“எஸ் ஸார்.” என்ற பதில்கள் கோரஸாக வந்தது.
 
ராக்கேஷ் மைக்கேலை நிமிர்ந்து பார்த்தான்.
 
“எஸ் ஆன்-லைன் சூதாட்டம்தான் சம்பந்தப்பட்ட நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவோம் அவங்க ரெஸ்பான்ஸ்ஸை பொறுத்து வலை விரிப்போம். எங்களோட டார்கெட் பேராசைப் பிடித்த ஆசாமிகள்தான். ஆன்லைன் விற்பனைகள் அதிகரிச்சிட்டு வந்ததால தங்களோட தொலைபேசி இணைப்புகளை அதில் குறிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அந்த தளத்தில் செயல்படறதுக்காக கேஷ்பேக், சில பரிசுக்கூப்பன்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்படும், இதே போல் மொபைல் நெட்வொர்க்கில் அவங்க நெம்பரை ஹேக் பண்ணிட்டா அவங்க பங்கேற்ற தகவல்கள் அந்த போனின் எண் எந்த இடத்தில் எல்லாம் லாகின் ஆகுன்னு தெரியும்.
 
உங்களுக்கு ஒரு ஆபர் இருக்குன்னு இரண்டு மெசேஜ் போகும், பார்க்கலைன்னா கவர்ச்சிகரமான குரலில் ஒரு பெண்ணை பேச வைப்போம். பாதிபேர் அதிலேயே மயங்கி விவரங்களை கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. எங்களோட சைட்டில் விவரம் கேட்பாங்க, டம்மியா சில கேள்விகள் கேட்போம். குழந்தை கூட பதில் சொல்வதைப் போல இலகுவா, பத்தாவது கேள்விக்கு பிறகு அவங்க எங்க லிங்கை அவங்க நண்பர்களுக்கும் குழுக்களுக்கம் ஷேர் பண்ணச் சொல்லுவோம். எல்லாம் முடிந்து இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு பெரிய பரிசை வின் பண்ணியிருக்கீங்கன்னு மெசேஜ் தருவோம். அந்த கங்கிராட்ஸ்க்கு மேல விழற கலர் பூக்கள் தான் நாங்க அவங்களுக்கு விரிக்கிற வலை.
 
இது ஏதும் தெரியாதவங்க அடுத்த கட்டத்துக்கு நகர்வாங்க. ஐபோனும், லேப்டாப், காஸ்ட்லி திங்க்ஸ் வெறும் கேள்விக்கு பதில் சொல்லி கிடைச்சா யார் விடமாட்டாங்க. இந்த போட்டிக்கு உள்ள டிமாண்ட்ஸை அவங்களுக்கு புரியாத வியாபார வார்த்தைகள் மூலம் அனுப்பி சப்மிட் பட்டனை கிளிக் பண்ணா?! இந்த பரிசை இத்தனை மணி நேரத்தில் நீங்கள் வெல்லலாம் அதற்கு ஒரு 20ஆயிரம் 30 ஆயிரமின்னு பொருளோட விலைக்கு ஏத்தாமாதிரி டெபாசிட் பண்ண சொல்வோம்.
 
சில பேர் பண்ணிடுவாங்க, அவங்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் கால்வாசி கூட இல்லாத இந்த டெபாசிட் பெரிசா தெரியாது. சிலர் எஸ்கேப் ஆயிடுவாங்க அவங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். எங்க வெப்சைட்டின் தகவல்கள் அனுப்புவோம் பாருங்க இந்த சைட்டில் நாங்க இதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் ஒரு 50 அல்லது 60 ஐடி கிரியேட் செய்து ரிவ்வியூஸ் பதிவு செய்து அவங்க நம்பிக்கையை அதிகப்படுத்துவோம். பணம் வந்ததும் அந்த ஐடி எங்க ஆப்பில் இருந்து அன்கன்சிடர் பகுதிக்குப் போயிடும் சர்வரோட கனெக்ட் செய்யவும் முடியாம, பணத்தை இழந்தவர்கள் அதிகம்.”
 
“இது தப்புன்னு உனக்குத் தோணலையா மைக்கேல்?!”
 
“சரி தப்பைப் பார்த்தா நான் எப்படி பிழைக்க முடியும். அதிலும் நான் யாரை ஏமாற்றினேன் பேராசை பிடித்த மனிதர்களை எல்லாமே இலகுவா கிடைச்சிடும்ன்னு குறுக்கு வழியில் முயற்சிக்கிற மனிதர்களை அவர்களை ஏமாற்றுவது எனக்குத் தப்பா தெரியலை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. எல்லாம் என் ஏரியாவிற்கு வந்த புது இன்ஸ்பெக்டரை சந்திக்கும் வரையில்!
 
ஆன்லைன் சூதாட்ட ஏமாற்றத்தில் இரண்டு பேர் தற்கொலை செய்திட்டாங்கன்னு பேப்பரில் நீயூஸ் படிச்சதும் மேற்கொண்டு இதை தொடறணுமான்னு தோணிச்சி. இரண்டு மனசா நான் தவிச்சிக்கிட்டு நின்னப்போ போலீஸ் விரிச்ச வலைன்னு தெரியாம அவங்களுக்கு எங்க டீமில் உள்ள பையன் கால் பண்ணிட்டான் ட்ரேஸ் பண்ணி அவனைப் பிடிச்சி என்னையும் அதே நேரம், நான் என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருந்தேன்.
 
எத்தனை சுலபமா வளர்ந்தேனோ அத்தனை இழந்தேன் ராக்கேஷ், எல்லாம் காலேஜ் பசங்க அவங்க தப்பிக்க அப்ரூவர் ஆகி என்னை கை காட்டிடாங்க, நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். டிராக்டிங் ஐடி லாக் பண்ணலை, நீரஜ் தன் வரையில் தப்பிக்கணுன்னு கம்பி நீட்டிட்டான். தங்கச்சியோட கல்யாணம் நின்னுபோச்சு அவ தற்கொலை பண்ணிகிட்டா அந்த ஏக்கத்திலேயே அம்மாவும் எல்லாத்தையும் இழந்திட்டேன் ராக்கேஷ்.”
 
மைக்கேல் கதறி அழுதான்.
 
“ஜெயிலுக்கு வந்தபிறகு கூட எனக்கு பிரச்சனைகள் ஓயலை. நீரஜ் பற்றிய உண்மையைச் சொல்லக் கூடாதுன்னு ஒரே மிரட்டல். இங்கே யாரையும் நம்ப முடியலை, யாரைப் பார்த்தாலும் என்னை கொல்ல வர்றா மாதிரியே இருக்கு. எப்படியோ தப்பிச்சிகிட்டே வர்றேன். நீரஜ் பற்றி வாய் திறக்கலை எல்லாமே என்னோட பிளான்னு ஒத்துக்கிட்டேன். குற்றத்தை ஒப்புக்கிட்டதாலே தண்டனை கொஞ்சம் குறைஞ்சது.”
 
“ம்...ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சிக்கல்.” மைக்கேலின் தோளின் மீது ஆதரவாய் கை வைத்தான் ராக்கேஷ்.
 
“எவன் குடிய கெடுக்க இன்னமும் கண்ணு முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று லாட்டியில் கம்பியைத் தட்டியபடியே கன்னடத்தில் கேட்ட செக்யூரிட்டியைப் பார்த்துவிட்டு இருவரும் தங்கள் உறங்க எத்தனித்தார்கள். மனத்தைப் போலவே விழிகளும் மூடாமல் வெறித்தன.