Skip to main content

குவைத்தில் நடைபெற்ற தமிழர்களுக்கான சிறப்பு வாலிபால் போட்டி

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

 

ghkj

 

குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நாடு தழுவிய தமிழ் அமைப்புகளுக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், தனது பதினான்காம் ஆண்டு மீலாது நபி பெருவிழாவை முன்னிட்டு இந்த வாலிபால் போட்டிகளை சால்மியா பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ போட்டிகளை தொடங்கி வைத்தார். பொருளாளர் திருபுவனம் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட சங்கத்தின் விளையாட்டுக் குழுவினர் முன்னிலை வகித்தனர். குவைத் நாட்டில் சமூக சேவைகள் செய்து கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளில் பதினாறு அணியினர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் வழங்கிய சுழற்கோப்பைகளும், பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
 

கடந்த வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் நிறுவனர் ஹச். முஸாவுத்தீன் ஆகியோர் போட்டியில் முதலிடம் பெற்ற அணி தமிழ் நண்பர்கள் (அபூ ஹலீஃபா) அணியினருக்கும், இரண்டாமிடம் பெற்ற குவைத் தமிழ் நண்பர்கள் (ஃபர்வானிய்யா) அணியினருக்கும் சுழற்கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். ஆட்ட நாயகன் விருது தமிழ் நண்பர்கள் அணியின் கேப்டன் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.

 

 

Next Story

“மத அரசியல்” - லால் சலாம் படத்திற்கு தடை விதிப்பு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
lal salaam movie release issue in kuwait

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” என பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், ரஜினி, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என விளக்கம் அளித்திருந்தார்.  

இதனிடையே இப்படத்தில் 7ஆம் அறிவு, ராஜா ராணி, உள்ளிட்ட சில படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர், 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தமிழர்கள் குறித்து பதிவிட்ட ஸ்க்ரீன் ஷாட் ஒன்று பலராலும் பகிரப்பட்டு தமிழர்களை இழிவு படுத்தி கருத்து தெரிவித்த தன்யாவுக்கு எப்படி இப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக கடும் விமர்சனம் எழுந்தது. பின்பு அவரே, “தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல” என தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார். 

இப்படி சில சர்ச்சைகளில் படம் சிக்கி வந்த நிலையில் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குவைத் நாட்டில் இப்படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டுவுள்ளதாக தெரிவித்து படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி; அனுமதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

marina beach volley ball admission announcement tamilnadu govt

 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023’ மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது.

 

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினருக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகளும்  நடத்தப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து ‘முதலமைச்சர் கோப்பை - 2023’ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

 

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளன. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளைக் காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.