Skip to main content

தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்தால் தோற்றுதான் போகணும்! - அஸ்வின் குமுறல்

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

180 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தாலே, வெற்றி பெறுவதற்கு பிரம்ம பிரயத்தனப் படவேண்டிய சூழலுக்கு ஐ.பி.எல். போட்டிகள் மாறிவிட்ட காலகட்டத்தில், வெறும் 132 ரன்களே எடுத்து, பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறது ஐதராபாத் அணி. 

IPL

நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மூன்று முறை மணீஷ்பாண்டே கொடுத்த கேட்சுகளை பஞ்சாப் அணி வீரர்கள் ட்ராப் செய்த பலனாய், அவர் மட்டுமே 51 பந்துகளுக்கு 54 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். 

 

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் இணை, முதல் எட்டு ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இந்த இருவர்தான் ஐதராபாத் அணியுடனான முந்தைய போட்டியில், அந்த அணியின் பவுலர்களை துவம்சம் செய்தவர்கள். இவர்களில் ரஷித்கான் ராகுல் விக்கெட்டையும், பேசில் தம்பி கெயில் விக்கெட்டையும் வீழ்த்த மீதமுள்ள போட்டி நிலவரம் வரலாறானது.

 

IPL

57 - 2 என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணி, 11 ஓவர்களுக்கு 76 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற எளிய இலக்கை நோக்கி நகர, தன் அவசரத் தனங்களால் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. ‘மிடில் ஓவர்களில் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை குறைத்து மதிப்பிட்டு, ரிஸ்க்கான ஷாட்டுகளை ஆடி எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்தோம். கே.எல்.ராகுல், கருண் நாயரைத் தவிர மற்ற எல்லா விக்கெட்டுகளும் அவசரத்தால் வீழ்ந்தவையே’ என அந்த அணியின் கேப்டன் அஸ்வின் குமுறி இருக்கிறார். 

 

பேய்த்தனமான பவுலிங் அட்டாக் இருந்தால் எவ்வளவு சின்ன ஸ்கோரை வேண்டுமானாலும் இலக்காக நிர்ணயித்து, வெற்றியும் பெறமுடியும் என்பதை மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஐதராபாத் அணி நிரூபித்து காட்டியிருக்கிறது. சக அணிகளே உஷார்...