Skip to main content

அன்று டி வில்லியர்ஸ்... இன்று மேக்ஸ்வெல்... தெறிக்கவிடும் குருனல் பாண்டியா...

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் குருனல் பாண்டியாவின் 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 23 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். அந்த போட்டியில் குருனல் பாண்டியாவின் 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தனர் ஆஸ்திரேலிய அணியினர். இதில் 36 ரன்கள் மேக்ஸ்வெல் எடுத்த ரன்கள். 

 

kk

 

 

சஹாலின் 4 ஓவருக்கு 64 ரன்கள், ஜோகிந்தர் ஷர்மாவின் 4 ஓவருக்கு 57 ரன்கள், ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக டி20-யில் இந்திய பந்து வீச்சாளரின் மோசமான பந்து வீச்சாக அமைந்தது குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவரின் பந்துவீச்சை மேக்ஸ்வெல் விளாசித்தள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கினர்.

.

இரண்டாவது போட்டியில் மேக்ஸ்வெலால் குருனல் பாண்டியாவின் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அவரின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார் மேக்ஸ்வெல். 3-வது போட்டியில் குருனல் பாண்டியாவின் 3 பந்துகளில் மேக்ஸ்வெலால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த போட்டியிலும் அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

 


முதல் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காத குருனல் பாண்டியா அடுத்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 5 விக்கெட்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் மட்டும் 4 விக்கெட்கள் எடுத்தார். இது டி20-யில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு ஸ்பின் பவுலரின் சிறந்த பந்து வீச்சாகும். இதன் மூலம் தன்னை விமர்சித்த விமர்சகர்களுக்கு அடுத்து வந்த இரண்டு போட்டிகளிலும் தக்க பதிலடி கொடுத்தார் குருனல் பாண்டியா.

 

மேக்ஸ்வெல் மட்டுமல்ல. உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்பட்ட ஏ பி டி வில்லியர்ஸ் கூட குருனல் பாண்டியாவின் பந்துவீச்சில் தொடர்ந்து அவுட் ஆகியுள்ளார். டி வில்லியர்ஸ் இதுவரை ஐ.பி.எல். போட்டிகளில் 4 முறை குருனல் பாண்டியாவின் பந்துவீச்சை சந்தித்துள்ளார். அந்த 4 முறையும் அவரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார். டி வில்லியர்ஸ்க்கு எதிராக குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு சராசரி 8 என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இன்று இந்தியா கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்படுபவர் ஹர்திக் பாண்டியா. இவரின் மூத்த சகோதரர்தான் குருனல் பாண்டியா. இருவரும் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார் குருனால் பாண்டியா. 

 

kk

 

 

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடினார். இதனால் 2018 ஐ.பி.எல். ஏலத்தில் 8.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளார்  குருனல் பாண்டியா. 33 இன்னிங்க்ஸ் ஆடி 708 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 31, ஸ்ட்ரைக் ரேட் 154. 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 28 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பவுலிங் சராசரி 28, எக்னாமி ரேட் 7. இதில் 13 விக்கெட்கள் டாப் ஆர்டர், 11 விக்கெட்கள் மிடில் ஆர்டர் என்பது கவனிக்கத்தக்கது. 

 

குருனல் பாண்டியாவை பொறுத்தவரை அணிக்கு பல வகைகளில் பலம் சேர்ப்பார். மிக சிறந்த பீல்டர். பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர். அதே சமயம் தேவைக்கு ஏற்ப, நிதானமாகவும் ஆடும் திறன் கொண்டவர். பவர்ப்ளே ஓவர்களிலும் பந்துவீசும் வல்லமை படைத்தவர். சஹால் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இந்திய அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் தான் தேவை. ஹர்திக் பாண்டியா வேகபந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். இந்த நிலையில் குருனல் பாண்டியா ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றால், அணியின் பலம் கூடும். இவர் இந்திய அணியில் இனிவரும் காலங்களில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம். 

 


 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.