Skip to main content

பாரா ஒலிம்பிக்கில் கலக்கிய இந்திய வீராங்கனைகள்!

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
Indian athletes who won gold and bronze in the Para Olympics

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனை களமிறங்கினர். இந்த ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய அணி வென்றது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று (30.08.2024) நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா 2ஆவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் தொடர்ந்து 2 பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Indian athletes who won gold and bronze in the Para Olympics

இது தொடர்பாகப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாராலிம்பிக் போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளது. வாழ்த்துக்கள் அவனி லேகரா. பெண்களுக்கான 10மீட்டர்  ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்றதற்காக 3 பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு இந்தியாவைப் பெருமைப்படுத்துகிறது. பெண்களுக்கான 10மீட்டர்  ஏர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். அவரது குறிப்பிடத்தக்கச் சாதனை அவரது அர்ப்பணிப்பையும், சிறந்து விளங்குவதற்கான தேடலையும் பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.