உலகின் மிகவேக மனிதர் என பெயர்பெற்ற உசைன் போல்டை விட கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக ஓடியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஓட்டப்பந்தயத்தில் பல முறை உலக சாதனைகளை நிகழ்த்தி உலகின் மிக வேகமான மனிதர் என்று பெயர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இவர் நிகழ்த்திய சாதனைகளை இவரே மீண்டும் முறியடித்த வரலாறுகளும் உண்டு. இந்த சூழலில் இவரை விட வேகமாக கர்நாடக இளைஞர் ஒருவர் ஓடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெறும் கம்பாளா ஓட்டப்பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் அந்த இளைஞர் கடந்துள்ளார். தனது மாடுகள் சேற்றில் ஓடும்போது, அதன் கயிறுகளை பிடித்தபடி, அதன் பின் அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்களும் ஓட வேண்டும். அந்த சேறு நிறைந்த பாதையில் ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.
இந்த கணக்கின்படி 100 மீட்டர் தூரத்தை கடக்க அவர் வெறும் 9.55 வினாடிகளே எடுத்துக்கொண்டுள்ளார். உசைன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனை 9.58 வினாடிகள் ஆகும். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் சூழலில், இது போன்ற வீரர்களை அரசு சரியாக அடையாளம் கண்டு முறையான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிறைய பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.