Skip to main content

98 டெஸ்ட்.. 29 கேப்டன்கள்.. 71 வருடங்கள்.. 31 தொடர்கள்..

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கியது டிசம்பர் மாதம்தான். ஆனால் அதை பற்றிய விவாதங்கள் அக்டோபர் மாதம் முதலே பரபரப்பாக இருந்தது. தொடர் தொடங்குவதற்கு முன்னர் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என ரிக்கி பான்டிங்கும், 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என மெக்ராத்தும் தெரிவித்திருந்தனர். 

 

ii

 

முதல் டெஸ்டில் கடும் போட்டிக்கு பிறகு இந்திய அணி வென்றது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி தான் தொடரின் பெரிய திருப்புமுனை. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் அட்டகாசமாக இருக்க ஆஸ்திரேலியா அணியால் சிறிதும் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை முற்றிலும் சிதறிப்போனது. நான்காவது போட்டியில் மழை ஆஸ்திரேலியா அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது.

 

பலவீனமான ஆஸ்திரேலியா அணியை வென்றதாக பலர் கூறுகின்றனர். ஆனால் தொடருக்கு முன்னர்வரை இரு அணியின் வேகப்பந்து பவுலர்களின் சராசரியை பார்த்தால் ஆஸ்திரேலியா வீரர்களின் பவுலிங் சராசரி சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் பவுலிங் சராசரி: கம்மின்ஸ்  25, ஸ்டார்க் 29,   ஹேஸல்வூட் 26. அதேசமயம் வெளிநாடுகளில் இந்திய பவுலர்களின் பவுலிங் சராசரி: சமி 31, இஷாந்த் ஷர்மா 34. 

 

ii

 

4 போட்டிகள் முடிவில் இரு அணிகளின் பவுலிங் சராசரியிலும் பெரிய வித்தியாசம் இல்லை. கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேஸல்வூட், லயன், சமி, ஜடேஜா, விஹாரி ஆகியோர் 25+ சராசரி கொண்டுள்ளனர். ஆனால், பும்ராஹ் ஒருவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவரின் பவுலிங் சராசரி 17. இதுவே இரு அணிகளின் பவுலிங்கில் பெரிய மாற்றமாக அமைந்தது.

 

முரளி விஜய் ஆஸ்திரேலியா அணியுடன் கடந்த தொடரில் 4 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 482 ரன்கள், 60.25 சராசரி என இருந்தார். இந்த தொடரில் 2 போட்டிகளில்  49 ரன்கள்,  12.25 சராசரியுடன் இருக்கிறார். விராட் கோலி கடந்த தொடரில் 4 போட்டிகளில்  4  சதம் ஒரு அரைசதம் உட்பட 692 ரன்கள், 86.50 சராசரியென இருந்தார். இந்த தொடரில் 4  போட்டிகளில் ஒரு சதம்,  ஒரு அரைசதம் உட்பட 282 ரன்கள், 40.29 சராசரியுடன் இருக்கிறார். 

 

பேட்டிங்கை பொறுத்தவரை 200+ ரன்களை கோலி, ரஹானே, ஹாரிஸ், ஹெட் ஆகியோர் எடுத்தனர். அதேசமயம் 300+ ரன்களை புஜாரா மற்றும் பண்ட் எடுத்தது இரு அணியின் பேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நல்ல ஃபார்முடன் வந்த கவாஜாவை இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். உண்மையில் ஸ்மித், வார்னர் இந்த தொடரில் விளையாடி இருந்தாலும் இந்திய அணி வென்றிருக்கும். அந்த அளவுக்கு இந்திய அணியின் பவுலிங் மாஸ் காட்டியது. இந்திய அணியின் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது.

 

i

 

 

தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரியானது 21.42 மட்டுமே. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரி 43.85. இந்திய அணியின் மற்ற விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் உடன் ஒப்பிடும்போது தொடக்க ஆட்டக்காரர்களின்  பார்ட்னர்ஷிப் மிகக்குறைவாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரி மற்ற விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் உடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்களில் பவுலர்களின் பேட்டிங் சராசரி 8.07. ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களின் பேட்டிங் சராசரி 18.33. 

 

பேட் கம்மின்ஸ் 446 பந்துகளில் 163 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் ஸ்டார்க் 212 பந்துகளில் 117 ரன்கள், லயான் 153 பந்துகளில் 83 ரன்கள், ஹஸல்வூட் 122 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால், இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் 100 பந்துகளுக்கும் குறைவாகவே விளையாடியுள்ளனர். இது இந்திய அணி முன்னேற்றம் காணவேண்டிய முக்கிய பகுதி.

 

டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. இதில் இந்திய அணி சொதப்பியது. ஆஸ்திரேலியா அணி ஓரளவு சிறப்பாக விளையாடியது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய பார்ட்னர்ஷிப் ரன்களை எடுக்கவில்லை. இது அவர்களின் தோல்வியை உறுதி செய்தது.

 

i

 

அஷ்வின், ஃபிட் இல்லாதது, ஆஸ்திரேலியா தொடருக்கு முக்கிய ஆல்-ரவுண்டர் வீரராக கருதப்பட்ட ஹர்டிக் பாண்டியா இல்லாதது, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக சர்வதேச போட்டிகள் விளையாடும் வீரர்கள், 6 மற்றும் 7-வது இடத்தில் விளையாடும் வீரர் யார்? என்ற பல பிரச்சனைகளை தாண்டிதான் இந்திய அணி வெற்றி பெற்றது. 98 டெஸ்ட், 272 வீரர்கள்,  29 கேப்டன்கள், 71 வருடங்கள், 31 தொடர்களை கடந்து ஒரு ஆசிய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. 

 

தொடரில் கோலியை சதம் அடிக்க விடமாட்டோம் என கம்மின்ஸ் சவால் விடுத்தார். இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் சதம் 5, ஆஸ்திரேலியா அணி வீரர்களின் சதம் 0 என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மாதங்கள் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி இல்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளின்போது தான் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று தனது டெஸ்ட் ஸ்கில்களை அதிகரிப்பேன் என தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியுள்ளார். 

 

 

 


 

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.