Skip to main content

ரிஷப் பாண்ட் மீது நம்பிக்கை வையுங்கள்! - கில்கிறிஸ்ட் வேண்டுகோள்

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் விக்கெட் கீப்பராக இடம் பெற்றிருக்கிறார் ரிஷப் பாண்ட். ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணி சார்பில் அதிரடியாக விளையாடி ரன்குவித்த ரிஷப், இந்தியா ஏ அணியிலும் சிறப்பாக ஆடினார். அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பியிருந்த தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடததால், அவரது இடத்தை ரிஷப் பாண்ட் பிடித்துக் கொண்டார். 
 

Gilchrist

 

 

 

மிகவும் சிறிய வயது, துடிப்பான வீரர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்ட பாண்ட், இயல்பாகவே அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் அவர்மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களே சொதப்பி வரும் நிலையில், அனுபவமற்ற ரிஷப் பாண்ட் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்கு ஆகுவார். கீப்பிங் சமயத்தில் அவரது ஃபூட் ஒர்க்கும் முறையாக இல்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ரிஷப் பாண்ட் அணியில் நீடிப்பது குறித்த விவாதங்கள் எழத் தொடங்கிவிட்டன. 
 

 

 

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் இதுபற்றி பேசுகையில், “ரிஷப் பாண்ட் மிகச்சிறந்த வீரர். வெறும் 20 வயதேயான அவருக்கு அணியில் அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தேர்வு வாரியமும் முழு கவனம் செலுத்தவேண்டும். வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் பாண்ட் மனதில் பயத்தை ஏற்படுத்தி விடும். அவரும் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். பொதுவாக ஒரு அணியின் தலைசிறந்த வீரர் ஓய்வு பெற்றுவிட்டால், அங்கு ஒரு வெற்றிடம் ஏற்படும். எங்களுக்கு வார்னே, இந்தியாவுக்கு சச்சின், ட்ராவிட் என சிலர் இப்படி அதை அடுக்கிக் கொண்டே போகலாம். தோனி ஓய்வான பிறகு இன்று இந்தியாவில் விக்கெட் கீப்பருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சரியான ஆளை இந்தியா கூடிய விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 
 

Next Story

பந்து வீச்சில் கலக்கிய ராஜஸ்தான்; ஜெய்ப்பூரில் கிடைத்த இரண்டாவது வெற்றி!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc live score update rajasthan wins

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.  பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார்.

ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிரடி துவக்கம் தந்த மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் டக் அவுட் ஆனார்.பின்னர் இணைந்த கேப்டன் பண்ட் நிதானம் காட்ட வார்னர் ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் வார்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில பந்துகளில் கேப்டன் பண்ட்டும் 28 ரன்களில் வீழ்ந்தார். பின்னட் வந்த ஸ்டப்ஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். அபிஷேக் பொரேல் 9 ரன்னில் வெளியேற, அக்சர் படேல் வந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட , பந்து வீச வந்த சந்தீப் சர்மா முதல் இரண்டு பந்துகளில் 6, 4 என ஸ்டப்ஸ் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், தனது அனுபவம் மூலம் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி அடுத்த 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட பந்து வீச வந்த ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஸ்டப்ஸ், அக்சரை ரன் எடுக்க விடாமல் தடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகனாக ரியான் பராக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.