Skip to main content

ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

dhoni

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் ஏழாவது நாளான நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இத்தொடரில், மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்தது. ராஜஸ்தான் அணியுடனான கடந்த போட்டியிலும் சென்னை அணி தோல்வியைச் சந்தித்தது. தொடர்ச்சியான இரு தோல்விகள் சென்னை ரசிகர்களை மட்டுமின்றி அணி நிர்வாகத்தையும் வருத்தமடையச் செய்துள்ளது.

 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்தபோது உணர்வுப்பூர்வமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெல்லி அணி வீரர் பிரித்தீவ் ஷா, பேட்டிங் செய்தபோது அவரது கண்ணில் தூசி விழுந்தது. இதனால், கண்ணெரிச்சல் ஏற்பட்டு அவர் தடுமாறிக்கொண்டிருக்க, தோனி அவருக்கு அருகே சென்று கண்ணில் விழுந்த தூசியை எடுக்க உதவினார். அந்தப் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது அது வைரலாகி வருகிறது.

 

போட்டியில் நாங்கள் தோற்றாலும், அனைவரது இதயத்தையும் வென்றுவிட்டோம் எனவும், கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்பதை தோனி நிரூபித்துவிட்டார் எனவும் சென்னை அணி ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.