Skip to main content

ஐக்கிய அரபு அமீரகத்தில் சி.எஸ்.கே- மும்பை வீரர்கள் பயிற்சியை தொடங்குவது எப்போது?

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

mi - csk

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

 

இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

 

இதனையொட்டி அண்மையில் சர்வேதேச போட்டிகளில் விளையாடாத சென்னை மற்றும் மும்பை அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று, அங்கு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்தநிலையில் இன்று முதல் சென்னை அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், ஷேக் சயீத் மைதானத்தில் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லி அணி வீரர்கள் வரும் சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.