
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் கடந்த மார்ச் மாதம் 01 ஆம் தேதி (01.03.2025) அக்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளியில் சேருகின்ற மழலைகளின் சேர்க்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மழலைகளுக்கான சேர்க்கை சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அதோடு அவர்களை வாழ்த்தி தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கியிருந்தார். இந்நிலையில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 310 மாணவர்கள் அரசுப் பள்ளியில் புதியதாக சேர்ந்துள்ளதாக தமிழ்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025 - 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” எனத் தெரிவித்துள்ளார்.