Skip to main content

ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்?

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது. அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யு.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam).. இது இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந் தெடுக்கும்வகையில் இருக்கும். முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.

 

IAS



இரண்டாம் தாள், திறனறிவைக் கூர்தீட்டக்கூடியது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் (Main Exam) செல்ல முடியும். முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.

முதன்மைத் தேர்வில் நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த இரண்டு தாள்களும் இருக்கின்றன. ஒரு கட்டுரை வடிவில் ((Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன. ஆகமொத்தம், ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண். இதில் ஆங்கிலமொழி தாளுக்கான மதிப்பெண்ணும், இந்திய மொழி தேர்வுக்கான மதிப்பெண்ணும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.

இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள். இதில் 275 மதிப்பெண். இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும். இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும்போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு பயிற்சி வழங்கப்படும். தகுதிநிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதை எல்லாம் யு.பி.எஸ்.சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

யு.பி.எஸ்.சி. போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
UPSC Attention Candidates

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டித் தேர்வர்கள் கடந்த 6 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.