வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளித்து விடலாம்! - டொனால்டு ட்ரம்ப்
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை சமாளிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/November/29/trump.jpg)
வட கொரியா நேற்று அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வான்பரப்பு வழியாக பாய்ந்த இந்த ஏவுகணை மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. வடகொரியாவின் இந்த சோதனையால், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரிய பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘வட கொரியாவால் ஏற்பட்டிருக்கும் பதற்றம் சமாளிக்கக் கூடியதுதான். அந்த நாடு மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக தகவல்கள் வருகின்றன. என்ன செய்தாலும், வட கொரியா மீதான நமது அணுகுமுறை மாறப்போவதில்லை. இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வட கொரியாவால் ஏற்படும் பதற்றத்தை அமெரிக்கா பார்த்துக்கொள்ளும். இராணுவத் தளபதி மேட்டீஸ் மற்றும் உயரதிகாரிகள் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அதனால், மக்கள் கவலை கொள்ளவேண்டா’ என தெரிவித்துள்ளார்.