Skip to main content

அசிம் எனும் ஆண் புலி மெலாட்டியை கொன்றது...!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 

tt

 

அரிய வகை புலியான சுமத்ரன் இனப் புலி இனவிருத்திக்காக லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

அரிய வகையான சுமத்ரன் புலி வகையில் மெலாட்டி எனும் பெண் புலி லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவந்தது. இதற்கு இணையாகவும் இனவிருத்திக்காகவும் அசிம் எனும் ஆண் புலி ஒன்று வரவழைக்கப்பட்டது. முதலில் மெலாட்டி இருக்கும் இடத்திற்கு எதிரே அசிமை வைத்து இரண்டு புலிகளுக்கும் இடையேயான அச்சத்தைப் போக்கி உறவை வளரவைக்கும் முயற்சியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டது. அதன்பின் மெலாட்டியுடன் அசிமை இணைசேர்க்க, மெலாட்டி புலியுடன் அசிமை ஒன்றாக விட்டுள்ளனர். இரண்டும் ஏழு நாட்கள் நன்றாக பழகிவர திடீரென இரண்டுக்கும் மத்தியில் பெரும் சண்டை எழுந்துள்ளது. இதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் ஒலிகளை எழுப்பியும், தீயைக் காட்டியும் புலிகளின் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத மெலாட்டியும், அசிமும் ஒருகட்டத்திற்கு மேல் இன்னும் தீவிரமாக சண்டையிட கடும் கோபத்தில் அசிம் எனும் புலி மெலாட்டியை கொன்றுள்ளது. 

 


இதுகுறித்து லண்டன் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு புலிகளையும் முறையாகத்தான் கவனித்து வந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்வு நடந்துவிட்டது. இந்த நிகழ்வால் பூங்கா நிர்வாகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்குத் தொடர்பு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

sathayamangalam tiger related issue

 

சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளி மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வனத்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் முக்கிய குற்றவாளியை சத்தியமங்கலம் புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் கைது செய்ய சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டறிந்த நீதிபதிகள், மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டவரை சத்தியமங்கலம் புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் கைது செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை நவம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

 

Next Story

“புலியைக் காப்பாற்றினால் மதச்சார்பு; பசுவைக் காப்பாற்றினால் வகுப்புவாதமா” -ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

 rss sunil ambekar save tiger campaign as secular but  save cow  as communal

 

டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நேற்று ‘ஏ ஹிந்து இன் ஆக்ஸ்போர்ட் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி, ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

அதில் பேசிய சுனில் அம்பேகர், “இந்தியா சுயமாக செயல்பட விரும்பினால், அது தனது காலனித்துவ மனதில் இருந்து வெளிவர வேண்டும். நீங்கள் ஏன் நகரங்களின் பெயர்களை மாற்றுகிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன், பம்பாய் மும்பை எனவும் மெட்ராஸ் சென்னையாக மாற்றப்படுவது மதச்சார்பற்றது என்று கூறினால்; அலகாபாத் ஏன் பிரயாக்ராஜாக மாறும்போது மட்டும் மதச்சார்பற்றதாக கருதவில்லை. மேலும், சிலர் புலியைக் காப்பாற்றுங்கள், பறவைகளைக் காப்பாற்றுங்கள் என்பது தான் மதச்சார்பற்றது என்கிறார்கள்.

 

ஆனால் பசுவைக் காப்பது வகுப்புவாதம் என்கிறார்கள். இதற்குக்  குழப்பமான இந்த காலனித்துவ மனப்பான்மை தான் காரணம். நாம் பிரிட்டிஷ் அரசின் சின்னங்களை நீக்கியிருந்தால் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால், முகலாய படையெடுப்பாளர்களின் சின்னங்களை அகற்றுவது மட்டும் எப்படி வகுப்புவாதமாகிறது? இதுபோன்ற எண்ணங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். உலகில் வெவ்வேறு மக்கள் ஒரு சமூகமாக பல்வேறு அணுகுமுறைகளை பின்பற்றுகின்றனர். ஒரு தேசமாக, மதமாக இவை எல்லாம் மோதல்களை ஏற்படுத்துகின்றன” என்றார். 

 

மேலும், “மேற்கு நாடுகளில் இருந்து வருவது நவீனமானது; இந்தியாவில் இருந்து வருவது பிற்போக்குத்தனமானது என்ற எண்ணத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். அதேபோன்று, கிழக்கில் இருந்து வந்ததாலே அது பிற்போக்கானது என சொல்ல முடியாது. அறிவியலுக்கும், மதத்திற்கும் எந்த முரண்பாடும் இல்லை. அறிவியலில் இருந்துதான் ஆன்மீகம் பிறக்கிறது. நமது வேதங்களின் பாரம்பரியமும் அறிவியல் பூர்வமானது” என்றார்.