
கடந்த வாரம் லிபிய கடற்பகுதியில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ரகசியமாக இடம்பெயர்வதற்காக அகதிகள் சென்ற படகு லிபிய கடற்பகுதியில் கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. கப்பலின் எஞ்சின் திடீரென வெடித்ததால் கட்டுப்பட்ட இழந்த கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. படகு விபத்துக்குள்ளானதை அறிந்த உள்ளூர் மீனவர்கள் விரைந்து சென்று கடலில் மூழ்கியவர்களை மீட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் செனகல், மாலி மற்றும் கானா நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை தேடி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் மேற்கொள்ளும் ஆபத்தான இந்த கடற்பயணங்களால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.