![Incident happened to Indian student in Canada](http://image.nakkheeran.in/cdn/farfuture/jDNSixl6MyQaxLc4P5FtDvb3Rq_hesq1I_VFb5CwwCk/1733479760/sites/default/files/inline-images/kuran.jpg)
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங் (22) என்பவர், கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கனடாவில் உள்ள சர்னியா பகுதியில், கிராஸ்லி ஹண்டர் (36) என்பவரோடு அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் சமையலறையில் இருந்த போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராஸ்லி ஹண்டர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குராசிஸ் சிங்கை சரமாரியாக பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த குராசிஸ் சிங், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்த குராசிஸ் சிங்கின் உடலை மீட்டனர். மேலும், தனது அறை தோழரை கத்தியால் குத்தி கொலை செய்த கிராஸ்லி ஹண்டரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாக, இந்தியா - கனடா உறவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.