Skip to main content

"நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான்" -சவுதியில் கதறும் 450 இந்தியர்கள்...

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

450 indians detained in saudi

 

 

சவுதியில் வேலையிழப்பு காரணமாக வீதிகளில் யாசகம் எடுத்த 450 இந்தியர்களை சவுதி அரசு கைது செய்துள்ளது. 

 

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில், இதனால் தங்களது சொந்த நாடுகளை விடுத்து வேறு நாடுகளில் பணிபுரியும் மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிபுரியும் நிறுவனர்களில் வேலையும் இல்லாமல், சொந்த நாடுகளுக்குத் திரும்ப போக்குவரத்து வசதிகளும் இல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளார். அந்தவகையில், இந்தியாவின் தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பீகார், டெல்லி, பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.

 

இவர்களில் பலருக்கு கரோனா காலத்தில் வேலை போனதுடன், அவர்களில் பலருடைய பர்மிட்டும் முடிவடைந்துவிட்டது. இதனால் உணவுக்கு வழியில்லாத அவர்கள் வேலையும் இல்லாததால் சவுதி வீதிகள் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி வீதிகளில் யாசகம் எடுத்துவந்த 450 இந்தியர்களைப் பிடித்து தடுப்பு காவல் மையத்தில் அடைத்துள்ளது சவுதி அரசு. இந்நிலையில், இதில் உள்ள தொழிலாளர்கள் சிலர் தங்களது நிலைகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதில் பேசும்போது, "நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான். வேறு எந்த தவறும் செய்யவில்லை. வேலை இழந்ததால் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். தடுப்பு காவல் மையத்தில் துன்பத்தை அனுபவித்து வருகிறோம்" எனக்கூறி கண்ணீர் விடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், சவுதி தடுப்பு மையங்களில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்