
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை அடுத்துள்ளது மேட்டுக்குடி. இந்த பகுதியைச் சேர்ந்த பார்வதிநாதன் என்ற இளைஞர். பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பெங்களூருக்கு பணிக்கு செல்வதற்காக கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு பார்வதிநாதன் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அவருடைய நண்பர் மது அருந்தலாம் என அழைத்துள்ளார். தொடர்ந்து இருவரும் ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். அப்பொழுது மது வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கையில் பார்வதிநாதனை மர்ம நபர்கள் சிலர் வெட்டிப் படுகொலை செய்தனர்.
கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்மையில் பார்வதி நாதனுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தொடர்பாக பிரச்சனை இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.