
கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.
இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.
வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர்.

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.