கரூர் மாவட்டம் குளித்தலையில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பம் ஆக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் கைது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கொசூர் பகுதி பனைமரத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மரம் வெட்டும் தொழிலாளி தினேஷ் குமார் (27). அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும், பள்ளி சிறுமியின் பெற்றோர்கள் சொந்தமாக முள் அறுவடை செய்யும் எந்திரம் வைத்துள்ளதால் வெளியில் சென்று விடுவார்கள். அதனால் வீட்டில் சிறுமியும் அவரது தம்பியும் மட்டுமே தனியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தினேஷ்குமார் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி வயிற்று வலி இருப்பதாகப் பெற்றோர்களிடம் கூறியதால், சிறுமியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இது குறித்த தகவலைக் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இதற்குக் காரணமான இளைஞர் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கரூர் நீதிமன்றத்தில் தினேஷ்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.