Skip to main content

எச்சரிக்கையை மீறி காரில் சென்ற இளைஞர்கள்! இரண்டு நாட்களுக்கு பின் பிணமாக மீட்பு! 

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Young people who went in the car despite the warning
தினேஷ்

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் கோதண்டராமன் (18). இவர், கடந்த 28ஆம் தேதி வராக நதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அவருடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் மாணவனை மீட்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து மேல்மலையனூர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 

 

அவர்கள், கடந்த இரண்டு நாட்களாக மாணவன் உடலை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், அந்தக் கிராமத்தின் அருகே ஈச்சமர புதரில் அவ்வாலிபரின் உடல் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு உடலை மீட்டு அரசு செஞ்சி மருத்துவனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கிளியான், சங்கர் ஆகிய மூவரும் முருகனுக்கு சொந்தமான இன்டிகா காரில் கெடிலம் ஆற்றின் தரைப்பாலத்தைக் கடக்க முயன்றனர். அப்போது கரையில் இருந்தவர்கள், ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறது கடக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பாலத்தைக் கடக்க முயன்றனர். அப்போது, அந்தக் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 

 

இதைப் பார்த்து கரையில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில், சங்கர், கிளியான் ஆகிய இருவரும் காரின் ஜன்னல் வழியாக தப்பி தண்ணீரில் நீந்தி கரையேறிவிட்டனர். ஆனால், முருகன் காரோடு சேர்த்து அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்த தகவல் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரையும் முருகனையும் தேடிவந்ததனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றார். 

 

கடந்த இரண்டு நாட்களாக தேடியும், முருகனையும் காரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிளியூர் கிராம மக்கள் இன்று (01.12.2021) அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேசமயம், அப்பகுதியின் அக்கம்பக்கத்தில் உள்ள கிராம இளைஞர்கள் ஆற்றில் இறங்கி காரையும் முருகனையும் தேடினர். இந்த நிலையில், இன்று மதியம் 3 மணி அளவில் ஆளுரைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் தம்பி ஆற்று வெள்ளத்தில் சிக்கியிருந்த காரைக் கண்டுபிடித்து காரின் மீது ஏறி நின்று கூச்சலிட்டார். கரையில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் உதவியுடன் காருக்குள் இருந்த முருகனை சடலமாக மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். முருகன் சடலத்தைப் பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இரண்டு நாட்களாக ஆற்று வெள்ளத்தில் தேடப்பட்டு வந்த காரையும் முருகனையும் கண்டுபிடித்த ஆலூர் கிராமத்து இளைஞரின் துணிச்சலைப் பலரும் பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.