Skip to main content

மனநிலை பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்ணின் இறுதி ஊர்வலத்தை அமர்க்களமாக நடத்திய இளைஞர்கள்!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

மனநிலை பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்ணின் இறுதி ஊர்வலத்தை இளைஞர்கள், பொதுமக்கள் அமர்க்களமாக  நடத்தினார்கள். அவர் வளர்த்த நாய்களும் சுற்றி சுற்றி வந்து நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

 

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் காமாட்சி (55). திருமணம் செய்யப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கீரமங்கலம் பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, நகரம் சன்னதி பகுதிகளில் மரத்தடியிலும் பயணிகள் நிழற்குடையிலும் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த பகுதியில் உள்ளவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டவர் தனக்கு துணையாக தெருக்களில் சுற்றி திரியும் நாய்குட்டிகளை எடுத்து வந்து வளர்ப்பார். தனக்கு வாங்கும் சாப்பாடு, டீ, போன்றவற்றை அந்த நாய்குட்டிகளுக்கு கொடுத்து வளர்த்து வந்தார். எப்பவும் காமாட்சி கையில் ஒரு நாய் குட்டியும், தனக்கு பின்னால் பல நாய்களும் வருவது வழக்கம். ஆனால் அந்த நாய்கள் அந்த வழியாக செல்வோரை கடிக்கவோ, குரைக்கவோ விடமாட்டார். பொதுமக்களிடம் மிகவும் அன்பாகவும் நடந்து கொண்டதால் அவரை அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
 

Young people who conducted the funeral procession of the mentally challenged woman


 

இந்த நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலை கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் ஒரு கடையின் ஓரத்தில் படித்திருந்த இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்தது தெரியாமல் அவர் வளர்த்து வந்த செல்ல நாய்குட்டிகள் எப்போதும் போல காமாட்சியின் சடலத்தின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் தனது எஜமானி எழவில்லை என்பதை பார்த்த பிறகு அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது அந்த நாய்கள். 

 

 


    
காமாட்சி இறந்துவிட்ட தகவல் அறிந்து அங்கு வந்த பெண்கள் கதறி அழுதனர். மேலும் கீரமங்கலம் சுற்றுவட்டார இளைஞர்கள், பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மேளங்கள் கொட்ட தொடங்கினார்கள். அதே போல மாலைகள், புதிய புடவைகள் வாங்கி வந்ததுடன் இறுதி ஊர்வலத்திற்காக வாகனம் ஏற்பாடு செய்து சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் வானவேடிக்கைகளுடன் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வாகனங்களின் அணிவகுப்புடன் ஊர்வலமாக அம்புலி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ஆதரவற்ற மனநிலை பாதித்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை அமர்க்களமாக நடத்திய இளைஞர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.


  Young people who conducted the funeral procession of the mentally challenged woman


 

மனநிலை பாதித்திருந்தாலும் நாய்கள் போன்ற செல்லபிராணிகளிடம் மிகவும் அன்பு காட்டி தனக்கு கிடைக்கும் உணவை நாய்களுக்கு கொடுத்து வளர்த்தவர் காமாட்சி. குழந்தைகளிடமும் அன்பாக நடந்து கொண்டவர் என்பதால் தான் இத்தனை மக்களும் திரண்டு வந்து மனநிறைவோடு செலவு செய்து ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர் என்றனர் இளைஞர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.