Skip to main content

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி மிரட்டும் இளைஞர்கள்! வேலூர் கோட்டையில் பரபரப்பு!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Young people Emphasis to remove hijab!

 

வேலூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சுற்றுலாத் தலமான வேலூர் கோட்டை அகழியில் உள்ள மதில் சுவர் மீது சுற்றுலாப் பயணிகள் சுற்றி வருவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில், வேலூர் கோட்டையில் சிலர் இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப்பை அகற்றுமாறு மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் இருந்து இஸ்லாமியப் பெண்கள், இந்து ஆண்களுடன் மதில் சுவரின் சுற்றுப் பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய பெண்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் இந்து ஆணுடன் சுற்றலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்துகின்றனர். இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த ஒரு பெண் ஹிஜாப்பை போட்டுக்கொண்டு எவ்வாறு இன்னொரு ஆளுடன் சுத்தலாம் என உருது மொழியில் கேட்கின்றனர். அது மட்டும் இல்லாமல் அடாவடித்தனமாக வீடியோ எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.

 

இந்த வீடியோவில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண், ஹிஜாப்பை கழட்ட வற்புறுத்திய நபாரிடம் "நீ யார் ஹிஜாப்பை அகற்ற சொல்வதற்கு" என்று திருப்பி கேள்வி கேட்கிறார். ஜமாத்துக்கு போலாமா? போலீஸ் ஸ்டேஷனுக்கு போலாமா? என வீடியோ எடுத்த நபர் அந்த பெண்ணை மிரட்டுகிறார். என் விருப்பம் நான் ஹிஜாப்பை அணிவதும் அணியாமல் போவதும் என அந்தப் பெண் திரும்ப கூறுகிறார். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நீ அணிந்திருக்கும் ஹிஜாப்புக்கும் எனக்கும் சம்பந்தம் உள்ளது. அதை நான் தான் தட்டி கேட்பேன் என மிரட்டலாக அந்த நபர் கூறுகிறார். 

 

இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களுடன் வருபவர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிஜாப் அணியமாட்டோம் என ஈரானிலும், ஹிஜாப் எங்கள் உரிமை என இந்தியாவிலும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சுற்றுலாத் தலமான வேலூர் கோட்டையில் தற்போது ஹிஜாப் தொடர்பான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எடுத்த நபர் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தற்போது ஏழு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

 

இதுபோன்ற செயல்கள் வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும், ஒருபுறம் பெண்கள் குறித்த பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் சமுதாயத்தில் அமைதியை சீர் கெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே வேலூர் கோட்டையில் நடைபெறும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க அதிகப்படியான காவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வரும் நிலையில் இது போன்ற செயல் தொடர்ந்து வருகிறது. ஆகவே வேலூர் கோட்டை பகுதியில் காவல் பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன் ரோந்து சென்று இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்