Skip to main content

காவல்நிலையத்தில் யாகமா? பொதுமக்கள் மத்தியில் வியப்பு?

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

yagam


காவல்நிலையத்தில் யாகம் நடத்தியதைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர். 
 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தைச் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சமீப காலமாகச் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கொலை, கொள்ளை எனத் தொடர் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கணபதி யாகம், இந்திராட்சி யாகம் நடத்தினால் அமைதி ஏற்படும் என்று ஆன்மிகவாதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
 


அதனடிப்படையில் இரண்டு யாகம் நடத்தியுள்ளனர். யாகம் நடத்துவதற்கு மேலும் ஒரு முக்கியக் காரணம், சமீபத்தில் காவல் நிலைய எல்லையில் உள்ள சிறு மதுரை கிராமத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்டார். அதேபோல் ஏமப்பூரில் கலவரம், திருட்டு என ஆங்காங்கே தொடர் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. இதனால் காவல் நிலையத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் நிம்மதி இல்லை, இந்தப் பிரச்சினைகளோடு கரோனா கட்டுப்பாடு சம்பந்தமாக இரவு பகல் பாராமல் பணிகள் தொடர்கின்றன.
 

பணிச்சுமை காரணமாக மனம் நொந்து போன காவலர்கள், சிலரின் ஆலோசனையின் பெயரில் அப்பகுதியில் உள்ள அர்த்தநாரி என்ற குருக்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விடியற்காலை நேரத்தில் முதலில் கணபதியாகம் நடத்தப்பட்டது, பிறகு இந்திராட்சி யாகம் நடந்துள்ளது. இந்த இந்திராட்சி யாகம் நடத்தினால் அப்பகுதியில் கெட்ட சம்பவங்கள் நடக்காமல் அமைதி ஏற்படும் என்பதற்காக இந்த யாகம் நடத்துவது உண்டாம்.
 

இந்த யாகத்திற்கு பிறகாவது இப்பகுதியில் அமைதி தவழுமா? பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் திருவெண்ணைநல்லூர் பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்