திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் அந்தப் பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கவிதா, பல்வேறு காரணங்களுக்காக அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி அவரது கணவர் பழனிவேல் ஆகியோரிடம் இருந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.16 லட்சம் பணத்தை அதிக வட்டிக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் ரூ.16 லட்சம் கடன் வாங்கியதற்கு அசலுடன் சேர்த்து ரூ.32 லட்சம் வரை திருப்பி கட்டிவிட்டேன். இருப்பினும் மேலும் 8 லட்சம் தர வேண்டும் என்று ஜெயலட்சுமியும் அவரது கணவரும் செல்போன் மூலமாகவும் நேரிலும் அவதூறாகவும், தரைகுறைவாகவும் பேசி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கவிதா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அடிக்கடி இருவரும் வந்து தனது துணி கடைக்கு வந்து மிரட்டி வருகின்றனர் என்றும், அதேபோன்று கடந்த 3 ஆம் தேதி ஜெயலட்சுமி தனது துணிக்கடைக்கு வந்து அவதூறாகப் பேசி கடையில் இருந்த பொருட்களை அனைத்தும் கீழே தள்ளி உடைத்து உள்ளதாகவும், மேலும் 8 லட்சம் ரூபாய் தந்தால்தான் துணிக்கடையை நடத்த விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக வெறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அதனை கண்டுக்கொள்ளாமால் காலம் தாழ்த்தி வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, துணிக்கடையில் அத்துமீறி புகுந்து கவிதாவை தாக்கி அவரது துணிக்கடையை சேதப்படுத்திய கண்காணிப்புக்கு கேமராவில் பதிவான காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.