விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக
செந்தில்பாலாஜிக்கு உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தாக அருள்மொழி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது சென்னை மாநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஏற்கனவே இதை போன்று கணேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உண்மை மறைத்து மற்றொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனடிப்படையில் அரசியல் உள்நோக்கம், பழிவாங்கும் நோக்கோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்றும், விசாரணையின்போது துன்புறுத்த மாட்டோம் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி, விசாரணைக்கு தேவைப்பட்டால் காவல்துறை முன் ஆஜராக வேண்டுமென செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.
- சி.ஜீவா பாரதி