Skip to main content

சொத்துக்குவிப்பு புகார்: அதிமுக சேலம் இளங்கோவனின் வங்கி லாக்கர்களில் சிக்கியவைகள் என்ன?

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

 What are the contents of ADMK Salem Ilangovan's bank lockers?

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் போல் செயல்பட்டு வந்த இளங்கோவனுக்குச் சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான சொத்து ஆவணங்கள், நகைகள் சிக்கியுள்ளன.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். அதிமுகவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருந்து வரும் இவரை, கடந்த அதிமுக ஆட்சியின்போது கட்சியினர் நிழல் முதல்வர் என்றே சொல்லி வந்தனர். எடப்பாடி பழனிசாமி உடனான நெருக்கத்தால் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போதைய ஆளுந்தரப்புடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி,  எக்கச்சக்கமாகச் சொத்துகளைக் குவித்ததாக இளங்கோவன் மீது புகார்கள் கிளம்பின. 

 

இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து கடந்த அக். 22ம் தேதி புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள அவருடைய சொகுசு வீடு, முசிறியில் உள்ள அவருடைய மகன் நிர்வகித்து வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சேலம், சென்னை, கோவை, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள இளங்கோவனின் பினாமிகளுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 36 இடங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

 

இந்த சோதனையில் இளங்கோவனின் வீட்டில் இருந்து நேரடியாகப் பெரிய அளவில் சொத்துகள் கைப்பற்றப்படவில்லை. சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. அதேநேரம், அவருடைய பினாமிகளின் நகைக்கடைகள், வீடுகளில் இருந்து 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளி பொருள்கள், 34.28 லட்சம் ரூபாய் ரொக்கம், 70 கோடி ரூபாய்க்கான பங்குச்சந்தை முதலீட்டு ஆவணங்கள், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

சோதனையின்போது, இளங்கோவனின் வங்கி லாக்கர் சாவிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அந்த இரண்டு சாவிகளில் ஒன்று, இளங்கோவன் தலைவராக உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாக்கர் உடையது; மற்றொரு சாவி, அயோத்தியாப்பட்டணம் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கர் உடையது ஆகும். இந்நிலையில் அந்த இரண்டு வங்கி லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (நவ. 30) திறந்து ஆய்வு செய்தனர். இந்தியன் வங்கி லாக்கரில் எதுவும் சிக்கவில்லை. 

 

ஆனால், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆய்வு செய்தபோது அதிலிருந்து இளங்கோவனுக்குச் சொந்தமான சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த சொத்துகளின் விவரங்களை காவல்துறையினர் டைரியில் குறித்துக் கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அந்த ஆவணங்கள் அனைத்தும் லாக்கரிலேயே வைக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் இளங்கோவன் முன்னிலையில் நடந்தன. இதையடுத்து லாக்கர் சாவிகள் இரண்டும், ஊழல் ஒழிப்புப்பிரிவு நீதிமன்றத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 

 

இது குறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரிடம் கேட்டபோது, ''இளங்கோவன் முன்னிலையில் அவருக்குச் சொந்தமான இரண்டு வங்கிகளில் உள்ள லாக்கர்களும் திறந்து சோதனை நடத்தப்பட்டது. ஒரு லாக்கரில் இருந்து 30க்கும் மேற்பட்ட சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. அதிலிருந்த விவரங்களை கணக்கில் எடுத்திருக்கிறோம். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறிய சொத்து விவரங்களுடன் இப்போது கிடைத்த சொத்து விவரங்களுடன் சரிபார்க்கப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு கடன் சங்கம், அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு கடன் சங்கங்களின் லாக்கர்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி லாக்கரில் நடந்த சோதனையில், இளங்கோவனுக்குச் சொந்தமான நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த விவரங்களை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 

 

இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.