Skip to main content

நலவாரியங்களில் இனி பதிவு செய்பவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்! -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
chennai high court

 

நலவாரியங்களில் இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள், தற்போது பதிவு செய்தால்கூட, எதிர்வரும் காலங்களில் அரசின் நிவாரண உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

 

நல வாரியங்களில் பதிவு செய்யப்படாத பிற தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கக்கோரி, கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின்  சார்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

 

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கரோனா ஊரடங்கு சூழலில், நல வாரியத்தில்  பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை, நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், பதிவை புதுப்பிக்காதவர்களுக்கும், பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவியாக 5000 ரூபாய்  வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் 1000 ரூபாய், மே மாதத்தில் 1000 ரூபாய் என ரூ.2000 வழங்கப்பட்டது.  இது தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு,  முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக,  ஜூன் மாதத்தில் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. 

 

அது தவிர,  தமிழக அரசு சார்பில் கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் என இருதரப்புமே இதில் பயன் பெற்றிருக்கக்கூடும்.  

 

12.13 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்த ரூ.3200 கோடி நிதியிலிருந்து 343 கோடி ரூபாய்,  கரோனா காலத்தில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக இருந்தால், அதை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 

 

கட்டுமானத் துறையில் 50 லட்சம் பேர், இதர துறைகளில் ஒரு கோடி பேர் என மொத்தம் ஒன்றரை கோடி பேர்,  பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாக இருப்பார்கள் என அரசு கருதுகிறது. இதுவரை பதிவு செய்து கொள்ளாத தொழிலாளர்கள், இன்றேகூட ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில்,  அடுத்த மாதத்திலிருந்து அரசு வழங்கும் நிவாரண உதவிகள் அவர்களுக்கும் கிடைக்கும்.

 

ஒரு குறிப்பிட்ட நலவாரியத்தை சேர்ந்த பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு மட்டும் அரசு நிவாரண உதவி வழங்கும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள பிற நலவாரியத்தைச் சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையோடு வழக்கு தொடரக்கூடும். ஏராளமான நிதியை கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு செலவு செய்து வரும் இந்த எதிர்பாராத சூழலில், அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி உள்ளது என்று தெரிவித்தார். 

 

வழக்கின் வாதம் நிறைவடையாததால், வழக்கு விசாரணை, 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்