
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை பசும்பொன்னில் இன்று (30.10.2024) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன் மற்றும் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று முத்துராமலிங்க தேவர் கம்பீரமாகக் காட்சியளித்தார் என அறிஞர் அண்ணா புகழ்ந்துரைத்தார். வீரராகப் பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார் என முத்துராமலிங்க தேவர் எனக் கலைஞர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய தியாகியைப் போற்றக்கூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நான் டெல்லிக்குச் செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அவ்வப்போது நான் எழுதியக் கடிதங்களுக்கு மதிப்பளித்து மீனவர்கள் ஓரளவுக்கு விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறோம். இதில் எந்த விதமான கருத்து மாறுபடும் கிடையாது.

கடந்த 2008ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்ட பணி கதவணையில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் சுமார் 9 ஆண்டுகள் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆட்சிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு தொடங்கப்பட்டது. கோவிட் தொற்று காலத்தில் இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு 40% வரை நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளன. தொடர்ந்து அந்த பணிகளை முடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பேசினார். அதே சமயம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தப் பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.