Skip to main content

நாங்கள் அடிமைகள் இல்லை... பெண்ணிய திருவிழாவில் ஒலித்த குரல்கள்...

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
Book release

 



பெண்ணியக் கவிஞர் நர்மதாவின் 3 கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம்  பிரதாப் பிளாசா ஓட்டலில் இனிதாய் நடந்தது. 




தொடக்கத்திலேயே நூலாசிரியரின் புதல்வர் இளங்கோவனின் மெல்லிசை மழை, வந்தவர்களின் மனதை இதமாய் நனைக்க, நூலாசிரியரின் பேத்தி, பாரதி பாடலுக்கு பரதம் ஆடி கண்களுக்கு விருந்தளித்தார். 


நூலாசிரியரின் மகள் இளவரசி தீபா வரவேற்புரையாற்ற, நிர்மலா லலிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தலைமை உரையாற்றிய நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ‘கவிஞர் நர்மதா பெண்ணியத்திற்காக வாள் சுழற்றும் போராளி. காதல் கவிதைகளில் கூட பெண்ணின் தன்மானம் கலைந்துபோக விடாதவர்’ என்று நூலாசிரியர் நர்மதாவைப் பாராட்டினார். முனைவர் தமிழ்ப்பாவை அறிமுக உரையில் நூலாசிரியரின் கவிதைச் சிறப்புகளை எடுத்துரைத்தார். 

 

Book release



நர்மதாவின் ’நான்,, பெண்!’ நூலை முனைவர் நளினிதேவி வெளியிட எழுத்தாளர் லதா பெற்றுக்கொண்டார். ’ஏகாந்தச் சிறுவாழ்வு’ நூலை இரவீந்திர பாரதி வெளியிட தாண்டவக்கோன் பெற்றுக்கொண்டார். ’வாசல்மழை’ நூலை வழக்கறிஞர் வசந்தி வெளியிட, இளமதி பத்மா பெற்றுக்கொண்டார்.

 

இயக்குனர் பிருந்தாசாரதி தன் வாழ்த்துரையில் ’முகநூல் மூலம் ஆரோக்கியமான பணிகளைச் செய்யமுடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நர்மதா. அவர் தன் தங்கை லதாவின் மறைவுக்காக எழுதிய துயரக் கவிதை... பல்வேறு கோணங்களில் பாராட்டத்தக்க கவிதையாகத் திகழ்கிறது’ என்றார். 

 

வாழ்த்த வந்த வழக்கறிஞர் சுசீலா ஆனந்த்,’சமூகவியல் களத்தில் நெருப்புப் பாதையில்  நடந்துகொண்டிருக்கிற என்னைப் போன்றோருக்கு,  சற்று ஆறுதலைத் தருகிற கவிதையாக, களைப்பைப் போக்கும் கவிதையாக நர்மதாவின் கவிதைகள் இருக்கின்றன’ என்று பாராட்டினார். 

 

Book release



 

நாடகக் கலைஞர் கி.அன்பரசனோ ‘புரியாத சொற்களோ மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சொற்களோ நர்மதாவின் கவிதைகளில் இல்லை. பாமரருக்கும் புரியும் மொழியில் மக்களுக்கான குரலாக அவரது கவிதைகள் ஒலிக்கின்றன’ என்று அவரது கவிதைகளை பாராட்டுனார். கவிஞர் கார்த்திக் திலகனும் கவிஞர் நர்மதாவின் போர்க் கவிதைகளை எடுத்துசொல்லி, இதுபோன்ற படைப்புகளை அவர் தொடர்ந்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


 

Book release





நிறைவாக அதிரடித் தொனியில் பேசிய பேராசிரியர் சுந்தரவள்ளி ”நான் பெண் என்று நர்மதாவின் கவிதைகள் கொஞ்சம் திமிராக, தெனாவெட்டாக, கெத்தாகத் தலை நிமிர்த்துகின்றன.  மோசமான ஆணைப் பெண் என்று சொல்லி அவர்களுக்கு வளையலையும் பெண் உடைகளை அனுப்புகிற வழக்கமும் தவறு. அது பெண்களைப் பெண்களே தாழ்த்திக் கொள்வதாகும்.  ஆணுக்கு எள் அளவும் எதிலும் குறையாதவள் பெண். இதைத்தான் நர்மதாவின் கவிதைகள் உரத்துச் சொல்லுகின்றன. 




பெண்ணியத்தின் விடுதலைக் குரலை எதிரொலிக்கும் நர்மதாவைப் பாராட்டுகிறேன். இது ஒரு பெண்ணியப் போராளிக்கு, சக பெண் படைப்பாளிகள் எடுக்கும் விழா’ என்றார் உற்சாகமாக.

 

நூலாசிரியர் கவிஞர் நர்மதா தனது ஏற்புரையில்...தான் கண்ட கனவு ஒன்றைக் கூறி,.. ’அந்தக் கனவும் கூட அவலத்துக்குரிய பெண்களின் வாழ்வை எடுத்துக்காட்டும்  குறியீடுதான். பெண்ணியத்தின் அத்தனை இருளும் நீங்க தொடர்ந்து எழுதுவேன்’ என்றார்.

 

பெண்களும் படைப்பாளர்களும் அதிகம் திரண்டிருந்த இந்த நூல் வெளியீட்டுவிழா, பெண்ணியத்தின் குரலை எதிரொலிக்கும் இலக்கியத் திருவிழாவாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது. 
 

 


 

சார்ந்த செய்திகள்