Skip to main content

மத்திய பாஜக ஆட்சிக்கு ‘ஜால்ரா’: ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி: மு.க.ஸ்டாலின்

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
Stalin



“மத்திய பாஜக ஆட்சிக்கு ‘ஜால்ரா’ போடும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது ‘ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி’” என கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  
 

2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஒரு கானல் நீராக அமைந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து எந்தவொரு திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கவில்லை. குறிப்பாக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோருடைய முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, 3.5 லட்சம் கோடி கடன் என்று தொடரும் மாநிலத்தின் நிதி நிலைமை, மிகவும் ஸ்தம்பித்துப் போயிருப்பது இந்த பட்ஜெட்டின் மூலம் தெளிவாக தெரியவருகிறது. 
 

அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மையை பொறுத்தவரையில், மிகுந்த மோசமான நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டியால் 9,000 கோடி ரூபாய் இழப்பு வருமென்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அன்றைக்கே எடுத்துச் சொன்னார். இன்றைக்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், ஜிஎஸ்டியால் பயன் விளைந்திருக்கிறது, லாபம் வந்திருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து, மத்தியில் இருக்கின்ற பிஜேபி ஆட்சிக்கு ’ஜால்ரா’ போடும் ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த பட்ஜெட் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற பட்ஜெட் பற்றி ஒரே ஒரு வரியில் சொல்வதென்றால், ‘ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி’. 
 

செய்தியாளர்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறாரே? 
 

ஸ்டாலின்: ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் 2ஜி வழக்கில் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கிலும், அவர்கள் தவறு செய்யவில்லை, நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு இருப்பது, உள்ளபடியே வரவேற்கத்தக்கது. திமுகழகத்தின் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட களங்கங்கள் எல்லாம், இல்லை என தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதை கண்கூடாக இன்றைக்கு நாம் பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Kolathur MK Stalin propaganda

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனையொட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (15.04.2024) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் சென்னை கொளத்தூரில் இன்று (16.04.2024) காலை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். மேலும் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது.