Skip to main content

அண்ணியாரே!  கண்ணாடி முன் நின்று கண் திறந்து பாருங்கள்! - தேமுதிக அனுதாபியின் குமுறல்!

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் கேப்டன் ரசிகர் தேமுதிக அனுதாபியும் கூட. ஆனாலும், விஜயகாந்த் குடும்ப ஆதிக்கத்தினால், கடந்த சில ஆண்டுகளாக விலகியே நிற்கிறார்.  கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அக்கட்சியின்  கடந்த கால நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து தனது ஆதங்கத்தை, தேமுதிக தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மிடம் மனம் திறந்தார்.

 

p


"தேமுதிக டபுள் கேம் ஆடுவது புதிது அல்ல. 2014-ல் எல்லா கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த நேரம். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் விஜயகாந்த். திடீரென கட்சி எம்.எல்.ஏக்களை எல்லாம் அழைத்துக் கொண்டு பிப்.13-ந்தேதி டெல்லி சென்றார். தமிழகத்தின் பிரச்சனைகள் என்று மிகப் பெரிய பைல் ஒன்றை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வழங்கினார் விஜயகாந்த்.

 

'உங்கள் மாநிலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா? இதுபற்றி உங்கள் முதல்வர்(ஜெ.) எதுவும் என்கிட்ட சொல்லலையே என்று ஆச்சரியப்பட்ட பிரதமர், முடிந்தவரைக்கும் தீர்வு காண முயற்சிக்கிறேன்' என்றார்.

 

இந்த பயணத்தின்போது விஜயகாந்த் உடன் சென்றிருந்த மைத்துனர் சுதீஷ், 2014 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக  பிஜேபி தரப்பிடம் பேச முயற்சித்தார். இதனால், ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அகமது பட்டேலை பிரேமலதாவும், சுதீஷூம் சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் சேர, தேமுதிக தரப்பு வைத்த கோரிக்கைகளை கேட்டு அகமது படேலுக்கு மயக்கம் வந்து விட்டதாம். அந்த அளவுக்கு பெரிய கோரிக்கை பட்டியலை முன்வைத்திருக்கின்றனர்.

 

"என்னடா இது, நம்மகிட்ட அப்பாய்ன்ட் மென்ட் வாங்கிட்டு, அங்கிட்டு பேசிட்டு இருக்காங்க, இந்த பாலிடிக்சே வினோதமாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட்ட ராஜ்நாத்சிங், மூவரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார். 

 

அப்போது, டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி கேள்வி கேட்டபோது தான், மிகவும் ஆக்ரோஷமாக பேசி, கோபத்தின் உச்சிக்கே விஜயகாந்த் சென்றார். இப்போது, அதே மாதிரி அதிமுக, திமுக கூட்டணி என 2 சைடிலும் துண்டு போட்டு வைத்திருந்த தேமுதிக, கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டது என்ற விரக்தியிலே, வெறுப்பு அரசியலை பத்திரிக்கையாளர்கள் மீது அள்ளி தெளித்திருக்கிறது.

 

அரசியலில் கொஞ்ச முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். 2005-ல் உருவான தேமுதிக, இப்போது வரை அனைத்து தேர்தலையும் சந்தித்து வந்திருக்கிறது. எனினும், 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 

 

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து நின்றது. பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள், கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 31.26 லட்சம் ஓட்டுகள் வாங்கி 10.08 சதவிகிதம் வாக்குகளைக் கைப்பற்றியது தேமுதிக. அதாவது அந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு 10.1 சதவீதம். 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. 

 

p

 

பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோர் அப்போது நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததில் தேமுதிகவின் பங்கு அதிகம்.

 

விருதுநகரில் போட்டியிட்ட வைகோ, வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்த தேர்தலில் அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்றார்.

 

ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் தேமுதிகவின் வாக்கு வங்கி வெகுவாக சரிந்துவிட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு (பிஜேபி கூட்டணியுடன் நின்று) 5.2 சதவீத வாக்கு கிடைத்தது. அதற்கு பிறகு நடைபெற்ற 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெற்றது வெறும் 2.4 சதவீதம் மட்டுமே. (அதுவும் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து நின்றது)

 

இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை நிலையில் தேமுதிக இருப்பதால், எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்ற நிலைப்பாட்டை அதிமுகவும், திமுகவும் எடுத்துவிட்டது. எங்களிடம் சீட் இல்லை என்பதை நாகரீகமாகவே சொல்லிவிட்டார் துரைமுருகன். கூட்டணியில் சேர்வதும், சேராததும் அவர்களது விருப்பம் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், இன்னும் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை போல், வெறுப்பு அரசியலை பத்திரிக்கையாளர்கள் மீது வெளிப்படுத்தி வருகிறார் பிரேமலதா.

அண்ணியாரிடம் கண்ணாடி முன் நின்று பார்க்கச் சொல்லுங்கள் கட்சிக்காரர்களே! இது 2009 தேர்தல் அல்ல. 2019-ல் நடக்கின்ற தேர்தல் என்று!" எனச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்.

 

கண்களை மூடிக்கொண்டு, உலகம் இருட்டாக இருக்கிறது என்று நினைத்ததாம் பூனை!  அப்படி ஒரு நிலையில தான் இருக்கிறார்கள் அக்கட்சியை தங்கள் இஷ்டத்துக்கு வழி நடத்திச் செல்பவர்கள்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம்” - சீமான் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் பதிலடி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vijayakanth son of Seaman said that Murasu symbol belongs only to dmdk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும்போது, “திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Next Story

சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விஜயகாந்த் பெயரில் விருது!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Award in the name of Vijayakanth at the International Norway Tamil Film Festival!

15 வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் பேசுகையில், “ஆஸ்கார் உள்ளிட்ட வெளிநாட்டு விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களின் பின்னால் நம் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என்று தனியான திரைப்பட விழாக்கள் இல்லை. சுமார் 222 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவர்களது படைப்புகளுக்கும் தனி அங்கீகாரம்  கிடைக்க வேண்டும், அதற்காக தமிழர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நினைத்து வந்தேன். பிறகு 20210 ஆம் ஆண்டு அதற்கான முதல் அஸ்த்திவாரத்தை அமைத்து, சிறுக சிறுக என்று இன்று மிகப்பெரிய விழாவாக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆரம்பிக்கும் போது எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. நார்வே நாட்டில் 15 ஆயிரம் மக்கள் தான் இருப்பார்கள், ஏதோ ஒரு திரைப்பட விழா என்று தான் நினைப்பார்கள். ஆனால், இன்று சுமார் இரண்டரை கோடிக்கு மேல் நான் விதைத்திருக்கிறேன். நம் படைப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த திரைப்பட விழா. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட 25 கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது வழங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அவர்களை அங்கே அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய பொருட்செலவு. அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று கெளரவிக்க வேண்டும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு முதல்,  ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த எங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக அறிவிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருப்போம். எனக்கு பிறகு என் இடத்தில் இருந்து நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்துவார்கள். நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கார் விருதுக்கு சமமான விருதாக சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விருது இருக்கும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.