Skip to main content

கஜா புயலடித்த பகுதியில் தண்ணீர் பஞ்சம்; அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சொந்த செலவில் குடிநீர் நிலையம் அமைத்துக்கொண்ட பொது மக்கள்;

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதித்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கையறுநிலையில் இருக்கின்றனர் பொதுமக்கள். தண்ணீர் பஞ்சத்தை போக்க கிராம மக்கள் தங்களுக்குள் நிதி திரட்டி ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்துள்ளனர்.

 

water plant

 

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் முதலில் சிக்கியது நாகை மாவட்டம். அதிலும் குறிப்பாக வேதாரண்யம் தாலுக்கா. அங்கு  பல்லாயிரக்கணக்கான மரங்கள் விழுந்தும், முறிந்தும், லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதோடு நின்றிடாமல் கடல் சேரும், கடல் நீரும்,  உட்புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்  நிலத்தடி நீர் முற்றிலுமாக மாறி உப்பு நீராக மாறிவிட்டது. சுவையான குடிநீரை நிலத்தடியில் பெற்று அருந்திவந்த மக்கள் தற்போது குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் செல்லும் அவல நிலையும் பல்வேறு கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. 
 

கோடை துவங்கியதும் தமிழகத்தில் பல கிராமங்கள் குடிநீருக்கு தள்ளாடிவருகிறது. அதேபோல் கஜா புயலால் பாதித்த பகுதிகளிலும் ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிக்கொள்ள நாகை மாவட்டம் புதுப் பள்ளி  கிராம மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் நிதி திரட்டி இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து திறந்துள்ளனர். 
 

புதுப்பள்ளி சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்ட புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பொதுமக்களே திறந்து வைத்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பராமரிப்பதற்கு கிராம மக்களை சுழற்சிமுறையில் குடும்பத்திற்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

இது குறித்து புதுபள்ளி சாமிநாதன் கூறுகையில், "கடற்கரையை ஒட்டிய பகுதி புதுப்பள்ளி கிராமம். கஜா புயலில் பெருத்த சேதம் அடைந்தது புதுப்பள்ளியில்தான். கடல் நீரும் கடல் சேரும் எங்க கிராமத்துக்குள்ள புகுந்து சாகுபடி நிலத்தையும், குடிநீருக்கும் வேட்டு வைத்துவிட்டது. உள்ளூர் அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை நேரடியாகவும், புகாராகவும் கூறிவிட்டோம், கஜா புயலடித்தபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எங்களை வேண்டுமென்றே அவர் புறக்கணிக்கிறார். அதை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எங்களுக்குள் வசூல் செய்து இரண்டு லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் சமுதாய கூடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை உருவாக்கியிருக்கிறோம். இதை பராமரிக்க வீட்டிற்கு ஒருவர் என்கிற சுழற்சி முறையில் ஏற்படுத்தி இருக்கிறோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி; அடிக்கல் நாட்டிய முதல்வர்

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Construction of seawater desalination plant Aadikal Natya Chief Minister

 

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் பேரூரில், 4 ஆயிரத்து 276 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு இன்று (21.08.2023) அடிக்கல் நாட்டினார்.

 

இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும்  சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 இலட்சம் மக்கள் பயன் அடைய உள்ளனர்.

 

Construction of seawater desalination plant Aadikal Natya Chief Minister

 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், சென்னையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் திரு.தாகா மசாயுகி, இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் திரு.சைட்டோ மிட்சுனோரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.