Skip to main content

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்... நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Villagers who boycotted the election ... Officials who promised to take action

 

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 6,652 வாக்குச்சாவடிகளில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே, 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. அதிக ஓட்டுகள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தினர், மூன்று முறையாக ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம்விட்டு தேர்வு செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பொன்னங்குப்பம் ஊராட்சியில் இருந்து துத்திப்பட்டு கிராமத்தைப் பிரித்து தனி ஊராட்சியாக அறிவித்து, தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என அறிவித்திருந்தனர். அதன்படி, 6ஆம் தேதி நடந்த முதற்கட்டத் தேர்தலை, பொன்னங்குப்பம் கிராமத்தினர் புறக்கணித்தனர். அங்கு உள்ள 1,496 ஓட்டுகளைப் பதிவுசெய்ய, அதே பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைத்திருந்தனர். ஆனால் மாலை 5:00 மணிவரை ஒருவர் கூட ஓட்டு போடவில்லை. இருப்பினும், துணை கிராமமான துத்திப்பட்டில் வழக்கம்போல் வாக்குப் பதிவு நடந்தது.

 

இந்நிலையில், இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணித்தனர். விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் உள்ளது விற்பட்டு கிராமம். ஆவியூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த இந்தக் கிராமத்தை தனி பஞ்சாயத்தாக மாற்ற நீண்டகாலமாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அங்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், அதனை விற்பட்டு கிராம மக்கள் புறக்கணித்தனர். மேலும், அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியை ஏற்றியும் எதிர்ப்பை தெரிவித்தனர். மக்கள் வாக்களிக்க செல்லாததால் அங்குள்ள வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் ஒதுக்கப்படுவதால் தனி ஊராட்சி கேட்பதாக விற்பட்டு கிராம மக்கள் கூறுகின்றனர். முன்னதாக கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், தேர்தல் முடிந்ததும் தனி ஊராட்சியாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.