Skip to main content

மோடி அரசின் சனாதன தர்மத்தைப் பேணத்தான் தமிழில் தேர்வெழுதத் தடை போட்டாரா துணைவேந்தர்? வேல்முருகன் கண்டனம்

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
velmurugan tvk


தமிழில் தேர்வெழுத தடை போட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்! இதனை எதிர்த்து அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வெறித்தாக்குதல்! மோடி அரசின் சனாதன தர்மத்தைப் பேணத்தான் தமிழில் தேர்வெழுதத் தடை போட்டாரா துணைவேந்தர் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இருமொழிக் கொள்கை மற்றும் சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் துணைவேந்தரை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழில் தேர்வெழுதத் தடையை உடனடியாக நீக்குமாறும் மாணவர்கள் மீது போட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெறுமாறும்  தமிழக அரசை வலியுறுத்துகிறோம்!
 

 

தமிழ்நாடு பின்பற்றும் அறிவார்ந்த இருமொழிக் கொள்கைப்படியான தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்வெழுதும் நடைமுறையை மாற்றி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என அண்மையில் அறிவிப்பு செய்தார் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன். அதோடு வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்படும் தண்டக் கட்டணத்தையும் பலமடங்கு உயர்த்தினார்.
 

 

இது அப்பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அடித்தட்டுப் பிரிவு மாணவர்களுக்கு எதிரான கொடூர, உள்நோக்கமுடைய நடவடிக்கையாகும். இதனால் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுவர். இதை உணர்ந்த மாணவர்கள், துணைவேந்தர் பாஸ்கரனின் தன்னிச்சையான இந்த முடிவைத் திரும்பப்பெறுமாறு இரண்டு மாதங்களாக முறையீடு, விண்ணப்பம், பேச்சுவார்த்தை என முயன்றுபார்த்தும் பலன் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ந் தேதி அய்ந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஒன்றுகூடி பல்கலைக்கழகத்தின் முன்பு அமைதியாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த துணைவேந்தர் காவல்துறையை ஏவ, அவர்கள் மாணவர்கள் மீது வெறித்தாக்குதல் நடத்தினர். ஆவேசத்துடன் தடியடி நடத்தினர். மாணவர்களின் சட்டையைப் பிடித்துக்கொண்டு தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, மாணவர்கள் 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்தனர்.
 

தமிழுக்குத் தடை போடும் துணைவேந்தரின் தன்னிச்சையான முடிவு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக்கே எதிரானது என்றால், தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை அவர் ஏவியது அரசமைப்புச் சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குமே எதிரானது.
 

கல்வி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத விதத்தில் துணைவேந்தர் நடந்துகொண்டுள்ளார். எந்தத் துறையைத் தேர்வு செய்திருக்கிறோமோ அது சார்ந்த அறிவைப் பெற்றிடத்தான் கல்வி; அதைத் தாய்மொழி வாயிலாக எளிதாகப் பெற்றிட இயலும்; பிற மொழி என்றால் அந்த மொழியே குறுக்குச் சுவராக நின்று தடுக்கும். எனவேதான் தமிழில் தேர்வெழுத விழையும் மாணவர்களைத் தடுக்கக் கூடாது என்கிறோம். ஆனால் இதெல்லாம் தெரிந்துதான் இப்படி ஒரு முடிவை  துணைவேந்தர் எடுத்திருப்பாரானால், அது மோடி அரசின் சனாதன தர்மத்தைப் பேணும் நோக்கில்தான் எனக் குற்றம் சாட்டுகிறோம்.
 

நாட்டின், மக்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வழிகாட்ட வேண்டிய கல்வி நிலையங்கள், இப்படி பிற்போக்குத்தனமான, புராணீக, பாசிச, சனாதன இழிவைத் திணிக்கும் பணியில் ஈடுபடுவதை அறிவார்ந்த தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வெழுத விதித்திருக்கும் இந்தத் தடையை உடைத்தெறிய வேண்டும். தேவைப்பட்டால் அதற்கு புதிய ஆணையே வெளியிட வேண்டும். தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்குமுன் இதைச் செய்ய வேண்டும்.
 

இருமொழிக் கொள்கை மற்றும் சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரனின் தன்னிச்சையான இந்த முடிவை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழில் தேர்வெழுதத் தடையை உடனடியாக நீக்குமாறும் மாணவர்கள் மீது போட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெறுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.