
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராம நிர்வாக அலுவலராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பட்டா மாறுதலுக்காக விஏஓ கோபியிடம் அணுகியுள்ளார். பட்டா மாறுதலுக்காக ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கோபி நிஜாமூதீனிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிஜாமுதீன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி இன்று வேப்பூர் கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் நிதாமுதீன் பத்தாயிரம் ரூபாய் பணம் வழங்கினார் அப்பொழுது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் கோபியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயியிடம் பட்டா மாறுதலுக்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.