
ஈரோட்டில் 3ஆம் தேதி தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்பு ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள ரயில் மாதிரியைப் பார்வையிட்ட அவர், சரக்கு ரயில் பெட்டிகளைப் பிரிக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் ரயில் இன்ஜினை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஆய்வின்போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீனிவாஸ் உட்பட ரயில்வே அலுவலர்கள் இருந்தனர். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் தாமஸ், "ஆண்டு தோறும் ரயில் நிலையங்களில் ஆய்வுசெய்வது வழக்கம். அதுபோலவே தற்போதும் ஈரோட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கரோனா வைரஸ் குறைந்துவருகிறது. இதனால், மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதாரத் துறையிடம் அனுமதிபெற்று பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்களில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள் விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.