Skip to main content

தினகரனை வைத்து அதிமுகவை உடைக்க முயற்சி: திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார்!

Published on 25/09/2018 | Edited on 26/09/2018


அமமுக தலைவர் டிடிவி தினகரனை வைத்து அதிமுகவை உடைக்க திமுக முயற்சிப்பதாக சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று (செப். 25) மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:

 

edapadi

 

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தார். 

 


அந்தப் போரில், இந்திய அரசு உதவியதாக சமீபத்தில் டெல்லி வந்திருந்த ராஜபக்சே சொல்லிவிட்டார். காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து செய்த போர்க்குற்றத்தை சர்வதேச நீதிமன்றம், மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று திமுக கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். 

 


திமுக, ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி. கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அவருடைய மகன் என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வருகின்றனர்.

 


திமுகவில் ஸ்டாலின் வந்தவிதம் வேறு. அதிமுகவில் நான் வந்த விதம் வேறு. நானும், ஸ்டாலினும் 1989ம் ஆண்டுதான் எம்எல்ஏ ஆக ஆனோம். ஆனால், பகுதி செயலாளராக இருந்து உழைத்து, இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன். கருணாநிதியின் உதவியால் எம்எல்ஏ ஆக, துணை முதல்வராக, கட்சித் தலைவராக வந்தவர் ஸ்டாலின். நான் கொல்லைப்புறமாக வரவில்லை. ஸ்டாலின்தான் அப்படி வந்தவர். அவரோடு உதயநிதியும் வந்துவிட்டார். 

 


என்னுடைய உறவினர்களுக்கு நெடுஞ்சாலை டெண்டர் கொடுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர் குறிப்பிடும் நபர் எனக்கு உறவினராகி மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், 2010ம் ஆண்டில் மட்டும் அவருக்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக, 10 டெண்டர்களை கொடுத்துள்ளது. நான் வழங்கியது, இ&டெண்டர். இதில் ஊழலே செய்ய முடியாது. 

 


கருணாநிதி ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதற்கு முதல்கட்டமாக 200 கோடி ரூபாயில் டெண்டர் வழங்கி, பின்னர் திட்டத்தை விரிவுபடுத்தி 485 கோடி ரூபாய்க்கு கூடுதல் டெண்டர் வழங்கினர். எனவே, ஜெயலலிதா விசாரணை கமிஷன் அமைத்தார். ஆனால், விசாரணை நடத்த விடாமல் 6 ஆண்டுகள் தடை ஆணை பெற்று வந்தனர். தற்போது, அந்த விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

 


இனிமேல் தெரியும் பாருங்கள். நாங்கள் விட்டாலும் மக்கள் விடமாட்டார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தால், தமிழகத்துக்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவு குறைந்திருக்காது. 

 


டிடிவி தினகரனை வைத்து அதிமுகவை உடைக்க திமுக முயற்சிக்கிறது. விபத்தில் எம்எல்ஏவான தினகரன், ஆர்கே.நகரில் நுழைய முடிகிறதா? சசிகலா மூலமாக அதிமுகவில் நுழைந்தவர்கள், கட்சிக்கு தலைவராக பார்க்கின்றனர். அதிமுகவில் கொல்லைப்புறமாக கொள்ளையடித்துச் சென்றவர்கள், இப்போது கட்சியை அழிக்கப் பார்க்கின்றனர். சசிகலா, குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை ஆரம்பிக்கின்றனர். 

 


வரும் 2019ம் ஆண்டில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 74 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் இப்போதே தயாராக இருக்கின்றனர். இந்த மாநாட்டில் 2.30 இலட்சம் ரூபாய் முதலீட்டை பெற திட்டமிட்டுள்ளோம். 

 


ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். ஆனால், எங்கள் ஆட்சியைப் பார்த்து ஊழல் ஆட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். வரும் தேர்தலில் அதிமுகவின் வலிமை தெரியும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.