Skip to main content

பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நடித்த லாரி டிரைவர்... 7 லட்சத்தை மீட்ட காவல்துறை!

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

Truck driver theft  money incident

 

சென்னை வெங்கம்பாக்கம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 53). இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதே வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் உதயகுமார் (வயது 35) என்பவரிடம் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து நாமக்கலில் முட்டை கொள்முதல் செய்து கொண்டு (வாங்கி) வருமாறு அனுப்பியுள்ளார். அதன்படி பணத்துடன் உதயகுமார் நாமக்கல்லுக்கு சென்னையிலிருந்து லாரியில் புறப்பட்டு சென்றார். அப்படி செல்லும் வழியில் நேற்று அதிகாலை திண்டிவனம் அடுத்த சலாவுதீன் பைபாஸ் சாலை அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அப்போது நான்கு பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று தன்னைத் தாக்கி விட்டு, தான் வைத்திருந்த 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக முட்டை வியாபாரி ராஜகுமாரிக்கு உதயகுமார் செல்பேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.

 

இந்த தகவலை கேட்டு பதறிப்போன ராஜகுமாரி தனது வழக்கறிஞர் ஒருவர் மூலம் மேற்படி விவரத்தை திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன், ஆய்வாளர் வள்ளி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், வினோத் ராஜ் விரைந்து சென்றனர். அங்கு இருந்த உதயகுமாரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது லாரி டிரைவர் உதயகுமார் முரண்பாடாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஓட்டுநர் உதயகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரணை செய்துள்ளனர். அப்போது பணத்தைத் யாரும் கொள்ளை அடிக்கவில்லை பேராசை காரணமாக தானே அந்த பணத்தை மறைத்து வைத்துக்கொண்டு மர்மநபர்கள் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றதாக உதயகுமார் கூறியுள்ளார்.

 

இதனால் பணம் கொள்ளை போனதாக உதயகுமார் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரும் காவல் நிலையம் வந்து விசாரணை செய்ததோடு உதயகுமார் மறைத்து வைத்திருந்த  7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து முட்டை வியாபாரி ராஜகுமாரியை சென்னையில் இருந்து வரவழைத்த காவல்துறையினர் அவரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர். 

 

Truck driver theft  money incident

 

பணத்தைத் தானே மறைத்து வைத்துக்கொண்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக போலீசாரிடம் நாடகமாடிய உதயகுமார் மீது ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். முட்டை வாங்குவதற்கு கொடுத்தனுப்பிய பணத்தை யாரோ திருடியதாக நாடகமாடிய உதயகுமாரின் செயல் திண்டிவனம் பகுதியில் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி எல்லாம் பணம் பறிப்பதற்காக நாடகமாடுகிறார்கள் என்பதற்கு உதயகுமாரின் செயல் ஒரு உதாரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.