Skip to main content

அனைத்து மாவட்டங்களிலும் பாரம்பரிய இசைப்பயிற்சி பள்ளிகள்!- பொதுநல வழக்கு தள்ளுபடி! 

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன். உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை இவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,000 கோவில்கள் உள்ளன. கோவில் பணம் வங்கிகளில் வைப்பு தொகையாக உள்ளது. கோவில்களில் இன்றளவும் பாரம்பரிய இசைக்கருவிகளை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாரம்பரிய வாத்தியங்களே பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, அந்தப் பாரம்பரியம் குறைந்து வருகிறது. இசைக் கருவிகளை இசைப்பதற்கு முறைப்படி பயிற்சி பெற்றவர்கள் குறைந்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவில், நாதஸ்வரம், இசைப் பயிற்சி,  ஓதுவார் பயிற்சி, நாலாயிர திவ்விய பிரபந்தம் ஓதும் அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குவதற்கு மாவட்டம்தோறும் பயிற்சி பள்ளிகள் அமைத்திட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று (05/11/2019) விசாரணைக்கு வந்தது. 
 

 Traditional music schools in all districts - welfare case dismissed!



 

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து, பல இடங்களில் இது போன்ற பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன’என்று தெரிவித்தார்.  இதையடுத்து  நீதிபதிகள், ‘தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புற்றீசல் போல் பெருகிய அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தற்போது காணாமல் போய் விட்டன. அதுபோல், 2019-2020 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது..’எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில்,‘ஏற்கனவே விடுமுறை கால வகுப்புகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. ஆகவே, மனுதாரரின் கோரிக்கையை உள்ளடக்கிய புதிய மனுவை, தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கி உரிய நிவாரணம் பெறலாம்..’என்றும் தெரிவித்தனர். 


 

சார்ந்த செய்திகள்