Skip to main content

டி.என்.பி.சி. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளாதா..? 

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

TNPC Exam issue

 

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தொல்லியல் அலுவலர்கள் பணிக்கான டி.என்.பி.சி தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  

 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ், மாவட்டம்தோறும் காலியாக உள்ள 18 தொல்லியல் அலுவலருக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு நடத்துவதற்கான விளம்பரம் 28.11.2019 அன்று வெளியிட்டு, 29.02.2020 அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவு 30.09.2020 அன்று வெளியானது.    

 

இதில், 300 பேர் தேர்வு எழுதியதில், 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 'டாக்'டிவி இ-சேவை மையம் மூலம், சரிபார்ப்புக்கான சான்றிதழ்களை அனுப்பி வைக்க 05.11.2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டது. இதன்படி சான்றிதழ்களை அனுப்பிய மாணவர்களை நேர்முகத் தேர்விற்கு, அவர்கள் பெற்றுள்ள ரேங்க் அடிப்படையில் அழைக்காமல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

தமிழ் இலக்கியம் முதுகலை பட்டப்படிப்பு பயின்றவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் வழங்கப்படும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பைப் பயின்றவர்கள், இந்தப் பணியிட வாய்ப்பிற்கு முன்னுரிமை பெற்றவர்கள். 


அதேபோல, தமிழ் இலக்கியம் முதுகலை பட்டப் படிப்பிற்கு இணையான முதுகலை வரலாறு மற்றும் முதுகலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் போன்ற படிப்புகள் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களும் இத்தேர்வுக்குத் தகுதியானவர்களே, என்ற அடிப்படையில் அவர்களும் தேர்வு எழுதியிருந்தனர்.


இந்நிலையில், ஓவரால் ரேங்கிலும், கம்யூனல் ரேங்கிலும் முதன்மையில் உள்ள முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் முதுகலைப் பட்டயம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படித்தவர்களுக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, ஓவரால் ரேங்க், கம்யூனல் ரேங்க் இரண்டிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை, பல்கலைக்கழகம் சார்பில், வரலாறு படித்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

 

உதாரணத்திற்கு எம்.பி.சி.க்குரிய நான்கு பணியிடங்களுக்கு தரவரிசைப் பட்டியல்படி 1, 3, 4, 5, 6, 10, 13, 24 ஆகிய 8 பேரை அழைத்துள்ளனர். 2, 7, 8, 9, 11, 12, 14 அழைக்கப்படவில்லை. இப்படி பி.சி, எஸ்.சி என அனைத்திலும் நடைபெற்றுள்ளது. 

 

ஆனால், இதுநாள் வரை தமிழ் இலக்கியமும் முதுகலைப் பட்டயம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்விற்கான படிப்பும் அடிப்படையாகக் கொண்டுதான் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால்  இந்நடைமுறை கைவிடப்பட்டு வழக்கத்திற்கு மாறான முறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு செயல்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தேர்வாணையம், தமிழ் படித்த மாணவர்களிடம் பி.எஸ்.டி.எம். சான்றிதழ் இணைக்கச் சொல்லியிருந்த நிலையில், அவர்கள் யாரும் இணைக்கவில்லை. அதனால், இப்படி அழைத்திருந்தோம் என்கிறார்கள்.  

 

அதேபோல, தேர்ச்சி பெற்றவர்கள், மேலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமது நிறுவனத்தில் பயின்ற மாணவர்களுக்கு, தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை அளிக்கும் பிஎஸ்.டி.எம். சான்றிதழ் வழங்காமல் இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் எனக் குற்றம் சாட்டுகின்றனர். 

 

வருகின்ற 29ஆம் தேதி அன்று நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசுப் பணிக்கு 394 பேர் தேர்வு’ - டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
394 Candidates Selected for Govt Jobs says tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியல் ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Cancel of the list of candidates for judicial posts High Court

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 12 ஆயிரம் பேருக்கு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நிலை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தி இருந்தது. இதனையடுத்து 2 ஆயிரத்து 544 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிவில் நீதிபதி 245 பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது. மேலும் இந்த பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், “சிவில் நீதிபதி பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு முறையில் குளறுபடி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைப் பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை. இதனால் மற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.