Skip to main content

கேரளாவை உலுக்கிய கொள்ளை சம்பவம்; தமிழக போலீசார் அதிரடி!

Published on 27/09/2024 | Edited on 27/09/2024
TN police action for Container truck incident near Kumarapalayam Namakkal dt

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று (27.09.2024) அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலான ஒரு மணி நேர இடைவேளையில் இந்த மூன்று ஏடிஎம்மில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். மையத்திற்கு முகமூடி அணிந்து வந்திருந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங், கேஸ் கட்டிங் மூலம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் 3 ஏ.டி.எம்.களில் இருந்த ரூ. 65 லட்சம் மதிப்பிலான பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள தடயங்களை சேகரித்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வந்தனர். அதே சமயம் இந்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் ஒன்றும் சிசிடிவி கேமரா பதிவாகி இருந்தது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

TN police action for Container truck incident near Kumarapalayam Namakkal dt

இந்த  சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளையர்கள் தமிழக உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கச் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 5 ஏ.டி.எம்.களில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

TN police action for Container truck incident near Kumarapalayam Namakkal dt

அச்சமயத்தில் கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளைக்கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளட்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 

சார்ந்த செய்திகள்