![Tiruvannamalai city Most famous private school girls related issues](http://image.nakkheeran.in/cdn/farfuture/RwfvG8dX9tg5IVshz4W52wynX_6F9xKnkemQX5FrtAY/1731608350/sites/default/files/inline-images/SIREN-ART_26.jpg)
திருவண்ணாமலை நகரில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி ஒன்றிலிருந்து மாவட்ட சிறார் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு புகார் வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் பெண் அலுவலர்கள் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மாணவிகள் சிலர் பள்ளி ஆசிரியர்கள் தங்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாகப் புகார் கூறியுள்ளனர்.
அது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏழாம் தேதி வழங்கப்பட்ட புகாருக்கு இன்று (14.11.2024) வரை அதன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் மகளிர் போலீசார் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கசிந்துள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டுத் தான் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மகளிர் காவல் நிலையத்தில் அப்படி ஒரு புகாரே வரவில்லை எனக் கூறுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிய மாவட்ட சிறார்கள் நலப் பாதுகாப்பு அலுவலர் செல்வியை நாம் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது தொடர்பை எடுத்துப் பேசவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை முழுவதுமாக மூடி மறைக்கப் புகாரே தரவில்லை என போலீசார் சொல்வதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் லட்சக் கணக்கில் பண பேரம் பேசப்படுவதாகவும், சிலர் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.