
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம் போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான, சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டடுக்கு கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், கட்டட இடிபாடுகளை எடுத்து சென்ட்ரிங் போடும் பணிகள் நடைபெற்றது. ராமர், சந்திரன், ஜெயராமன், அழகர், வாசன், முனியசாமி ஆகிய 6 பேர் இந்தக் கட்டடத்தில் வேலை பார்த்துவந்தனர். இந்நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் ராமர், சந்திரன், ஜெயராமன் ஆகிய 3 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதி மூன்று பேர் சிறுசிறு காயங்களுடன் தப்பி ஓடி வந்துவிட்டனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முறையான அனுமதி பெறாமல் வேலை நடைபெற்றதே இந்த விபத்திற்கு காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.
மதுரை, திடீர் நகர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டட இடிபாடுகள் குறித்து காவல்துறையில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.