
சென்னையில் சிக்னலில் கத்தியால் மிரட்டிய ரவுடியை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மதன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில், மதன் ஆட்டோவில் செல்வதாக பட்டினப்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காசிமேட்டில் இருந்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மதனை பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தனர்.
போலீஸார் தன்னை பின் தொடர்ந்து வருவதை அறிந்த மதன், ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி கத்தியைக் காட்டி போலீஸாரை மிரட்டிய நிலையில், பொதுமக்கள் உதவியுடன் சாந்தோம் சாலை சிக்னலில் வைத்து மதனை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.