Skip to main content

உடன்படு... இல்லையெனில்... பாலியல் சீண்டலால் தீப்பற்றிய சிறுமி!!!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

tttt


தங்களுடன் உடன்படு, இல்லையெனில் குடும்பத்தையே கொளுத்திடுவோம்" என பாலியல் வன்முறை மிரட்டலுக்குப் பயந்த சிறுமி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குடபட்ட பகுதியைச் சேர்ந்தவர் அந்த 16 வயது சிறுமி. பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று விட தனியாக இருக்கும் அந்தச் சிறுமியிடம் அதேப் பகுதியைச் சேர்ந்த சரவணன் அடிக்கடி பாலியல் சீண்டல் கொள்வது வழக்கமாம். இது குறித்து பொது வெளியில் தெரிந்தால் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் இழுக்கு என்று கருதிய அந்தச் சிறுமி சரவணனின் பாலியல் சேஷ்டையை வெளியில் சொல்லாமல் தனக்குத் தானே சமாதானப்படுத்திப் போராடி வந்திருக்கின்றார். இந்நிலையில், சமீபத்தில் சரவணன் மற்றும அவனது நண்பர்களான வேல்சாமி மற்றும் குகன் ஆகியோருடன் சேர்ந்து மது போதையில் கேலி செய்ததோடு மட்டுமில்லாமல் பாலியல் சீண்டலுக்கு முன் வர, எதிர்த்துள்ளார் அந்தச் சிறுமி. 
 

அப்பொழுது, "ஒழுங்காக உடன்படு.! இல்லையெனில் உன்னுடைய குடும்பத்தையே கொளுத்திடுவோம்" என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு நகர்ந்துள்ளனர் அம்மூவரும். இது தொடர்ந்தால் தனக்கும், தன்னுடைய இழுக்கு என்று நினைத்த அந்தச் சிறுமி தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துத் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தீப்பற்றியதால் கடும் அலறல் சப்தத்துடன் போராட, அந்தச் சிறுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் அந்தச் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

"அவளுக்குப் பாலியல் சீண்டல்களைத் தினசரி கொடுத்துள்ளது இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் மூவரும் லாரி ஏறி தப்பித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். தலைமறைவானவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தரவேண்டும்." என்கிறார் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சிறுமியின் தாயார் பத்ரகாளி. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்